Friday 10 March 2017

அரளிப்பாறை



குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.அதுபோல் செட்டிநாட்டின் ஒரு அங்கமாகவும் பாண்டிய நாட்டின் ஒரு அங்கமாகவும் விளங்கும் அரளிப்பறை ஆ.தெக்கூருக்கும் சிங்கம்புனரிக்கும். அருகில் அமைந்துள்ள ஒரு சிறுகிராமம்.இங்கும் தெற்கு வடக்காக ஈராயிரம் அடி நீளமும் கிழக்கு மேற்கில் முன்னுறு அடி நீளமும் நூறு அடி உயரமும் கொண்டுள்ள பாறை மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணி ஆண்டிக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் தண்டாயுதபாணியை அரவக்கிரியான் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இந்த கோவில் ஐந்து நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட ஒரு கோவிலாகும். இங்கு முருகப்பெருமான் தனித்து காட்சி தருகிறார். இங்கு மலையில் தண்டாயுதபாணியுடன் இடும்பன் மற்றும் அண்ணாமலையார் காட்சி தருகின்றனர்.




கோவில் அமைப்பு :

பொதுவாக முருகன் கோவில்களில் கிழக்கு திசை நோக்கியே அருள் புரியும் இறைவன் இக்கோவிலில் இறைவன் பக்கதர்களின் வம்சவிருத்திக்காவும் குடும்பநலனுக்காவும் மேற்கு நோக்கியபடி நின்றபடி காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. முருகன் கோவிலுக்கு தெற்கே குடைவரைகோவிலில் அண்ணாமலையார் காட்சி தருகிறார்.



குடைவரைக்கோவில் :


பாலதண்டாயுதபாணிசுவாமி கோவிலின் தெற்கே கிழக்கு நோக்கியபடி குடைந்தெடுத்த குகையில் அருள்புரியும் அரவங்கிரிஸ்வரர் ஆலயம் அரிகேசரி மாறவர்ம சுந்தர பாண்டியன் என்ற கூண்பாண்டியனால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கருவறையை மட்டும் கொண்டது. அதில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத் திருவுரு பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவாயிலை ஒட்டி வடக்கு நோக்கிய புரையில் முகலிங்கம் புடைசிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது இத்தகுலிங்கங்கள் சில இடங்களில் தான் காணப்படுகின்றன. இங்குள்ள முகலிங்கம் முற்றுபெறாத நிலையில் உள்ளது. அதில் ஒரு முக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. குடவரைக் கோவிலில் வேறு எங்கும் முகலிங்கம் இருப்பதாக தெரியவில்லை. தெற்கு நோக்கிய புரையில் முற்று பெறாத வடிவம் ஒன்று காணப்படுகிறது. இவ்வாலய பணி துவங்கிய காலத்தில் மன்னர் சமண மதத்தை தழுவியதால் திருப்பணி தடைபட்டது. திருஞானசம்பந்தரால் மீண்டும் சைவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார். என்று சொல்லப்படுகிறது.


தல வரலாறு:

பாண்டியமன்னன் கனவில் இறைவன் தோன்றி இவ்விடத்தில் கோவில் எழுப்பி வழிபட சொன்னதாக சொல்லப்படுறது. இங்கு அரவத்தில் வடிவில் இறைவன் தோன்றி கோவில் நிருமாணிக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த மலையே அரவத்தின் உருகா காட்சி தருகிறது. இத்தலம் முன்பு அரவக்கிரி என்று அரவக்குன்று என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.பின் இதுவே பேச்சு வழக்கில் அரளிப்பாறைஎன்று மாருவு பெற்றுள்ளது. இந்த தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி காட்சி தருவது மிகவும் சிறப்பு. அரவக்கிரியானை வழிபட குடும்ப ஒற்றுமை பலப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. இங்கு முருகப்பெருமான் எந்த ஒரு ஆயுதமும் தாங்காமல் தண்டாயுதத்தை மட்டுமே கையில் ஏந்தி இறைவன் ஏகாந்தமாக தனித்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.



திருவிழா:

அரவக்கிரியானுக்கு வருடாந்திர திருவிழா என்பது மாசிமகத்தையோட்டி காப்பு கட்டி பத்துநாள் மிகபெரிய உற்சவமாக நாட்டார் நகரத்தார்கள் ஊரார் என்று இணைந்து முருகப்பெருமானை தொழுகின்றனர். மாசி மகத்தன்று மிகவும் விமர்சையாக முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மாசி மகத்தன்று ஐந்து நிலை நாட்டார்கள் ஒன்று கூடி ஜவுளி கொண்டுவந்து முருகனை வழிபடுகின்றனர்.அதன் தொடர்ச்சியாக மகத்தன்று நண்பகலில் மிகவும் பிரசித்திபெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டை தொடங்கக்படுகிறது. அரளிப்பாறை மஞ்சுவிரட்டை என்பது அரளிப்பாறையை சுற்றி நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு அரளிப்பாறை மஞ்சுவிரட்டை மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த மஞ்சுவிரட்டை காண பாலாயிரம் மக்கள்மலையில் ஒன்றுகூடுகின்றனர்.



மாசிமகம் விழாக்காலம் கோடைக்காத்தின் துவக்க காலம் என்பதால் ஆங்காங்கே வழியெங்கும் தண்ணீர்பந்தல்கள் நீர்மோர் பந்தல்கள் பானகம் மாங்காய் நெல்லிக்காய் சுண்டல் என்று மக்களின் களைப்புகள் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே நாட்டார் நகரத்தார்கள் பந்தல்கள் அமைத்து தொன்றுதொட்டு வழங்கிவருகின்றனர்.



மேலும் அரவக்கிரியானுக்கு ஒவ்வொரு மாதக்கார்த்திகையின் போதும் மிகவும் சிறப்பாக முருகனுக்கு அபிஷேகம் செய்து நகரத்தார்கள் கோவிலுக்கு அருகில் உள்ள நகர விடுதியில் அன்னம் வடிக்கப்பட்டு மாதம்தோறும் தெக்கூர் நகரத்தார்களால் அன்னதாம் செய்யப்பட்டு வருகின்றது. அரவக்கிரியான் கோவில் திருப்பத்தூரில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வேணும் அரவக்கிரியான் துணை
- ------- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

No comments: