Saturday 13 December 2014

அழகிய மார்கழித் திங்கள்



மார்கழிமாத நிகழ்வு பற்றி ஒரு சிறு கிறுக்கல் . அழகிய இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தின் தமிழகத்தில் நிகழ்பவைகள்


மாதமீது மாதமீது
கன்னியர்கள் போற்றுமாதம்
கண்ணனின்  மாதம்

வீடெங்கும் வாயிலில்
வண்ணக்கோலங்கள்   நிரம்பும்
மார்கழி  மாதம்

திருப்பள்ளியெழுச்சி பார்பதற்கும்
திருப்பாவை திருவெம்பாவை
ஓதிடவே  உவந்தமாதம்

மாலையிலே முத்தாய்கோலமிட்டு
பெண்கள் போற்றித்தொழும்
செவ்வாப்  பிள்ளையாரின்மாதம்

வைணவர்கள் கண்விழிக்கும்
ஏகாதசியும் ஆதிரையான்
மகிழ்ந்திட முழுமதியுடையமாதம்

நகரத்தாரும் ஈழத்தாரும்
கொண்டாடிமகிழ பிள்ளையார்
நோன்புடைய மாதமீது

உழுதுவிதைத்த உழவனுக்கு
மகிழ்வூட்டும் அறுவடைகள்
துவங்குகின்ற மாதம்

சிறப்புறவே  இல்வாழ்வுபுரியும்
மகளைதேடி வரும்பொங்கட்
பானைகளின்  மாதம்

---ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Tuesday 2 December 2014

என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 2

சாயவனம் (திருச்சாய்க்காடு)

சாயாவனம் இந்த தலம்  பூம்புகாருக்கு அருகில் உள்ளது. ஆடிமாதம் பூம்புகார் நகரில்  பட்டினத்தார் விழாவினை காணச்செல்வோர் இந்த தலத்தை கண்டிருப்பர் .இந்த தலம் காசிக்கு நிகரான ஒரு தலம்.பூம்புகார் பட்டினத்தார் விழாவை காண சென்றபோது இந்த ஆலயத்தை காண நேர்ந்தது. பார்த்த மாத்திரத்திலேயே மனதை கொள்ள கொண்ட ஒரு தலம்.

" சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
 முக்குளமும் ஆடி 
முத்திபெற்று வந்த கண்ணோ  "


என்ற செட்டிநாட்டு  ஆச்சிகள்  தாலாட்டு பாடி குழந்தைகளை தூங்கவைத்த தாலாட்டு வரிகள் இவை . சங்கு முகம் என்று கூறுவது காவேரி ஆறு கடலுடன் கலக்கும் முகத் துவாரத்தில் நீராடுதல் மிகவும் சிறப்பு புண்ணியம் வாய்ந்த ஒன்று . அப்படி சங்குமுகத்தில் தீர்த்தமாடி சாயாவனத்தில் உள்ள ஈசனை வழிபட்டு பின் அருகில் உள்ள திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களில் (சூரிய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் , அக்னி தீர்த்தம் ) நீராடி அங்கு உள்ள சிவபெருமானை வழிபாட்டால் முத்தி கிட்டும் என்பதுநம்பிக்கை  இந்த தாலாட்டில் தெரியவருகிறது .அத்தகைய புகழ் பெற்ற ஒரு தலம்.
முகப்பு வாயில்  சிவபெருமான் ரிஷபத்தின் மீது ஏறி இந்திரனுக்கும் இயற்பகையாற்கும் காட்சி நல்கும் சுதை சிற்பம்
சாயவனம் :

இந்த தலத்திற்கும் இப்பெயர் வரக்காரணம் இங்கு  கோரைப் புற்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது .சாய் என்பது கோரைப் புல்லை குறிக்கும் சொல் அதன் பெயரால் இந்த தலம் சாய்க்காட்டுடன் திரு என்ற  அடைமொழியும் சேர்த்து  திருச்சாய்காடும் என்று அழைக்கப்பட்டது . சாயாவனம் .கோரைபுற்கள் அதிகம் காணப்பட்டதால் இந்த தலம் சயாவனம் என்றும் அழைக்கப்பட்டது .

இறைவன் திருப்பெயர் : சாயாவனநாதர் 
இறைவியின் பெயர் :  குயிலினும் இன்மொழி அம்மை 
ஸ்தல விருட்சம் : கோரைப்புல் 
தீர்த்தம் : சங்கு முகம் (காவேரி ), ஐராவததீர்த்தம் 
பாடியவர்கள்: அப்பர் (2) , திருஞானசம்பந்தர் (2)
ஆலயத் தோற்றம் கொடிமரக்கணபதியின் காட்சியும்

ஆலயத்தின் மூன்று நிலை ராஜ கோபுரம்
அதிகார நந்திஉயர்ந்த பீடத்தில்
திருக்கோயில் சிறப்பு :

இக்கோயிலை இந்திரன் , ஐராவதம் , ஆதிசேசன் ,உபமன்யு முனிவர் , இயற்பகையார் , குபேரன் , இந்திரனின் தாய் அதிதி , பட்டினத்தார் ,சிவகலை ஆகியோர் வழிபட்டு மருதீசனையே பிள்ளையாக பெற பெறனர். இங்கு தினமும் இந்திரன் தினமும் பூசிப்பதாக ஐதீகம் .இந்த ஆலயம் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது .வடகரையில் இந்த தலம் 9வது பாடல் பெற்ற ஆலயம் . இக்கோவில்  274 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று .
சுற்றுப்ராகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி
தேர்போன்ற அமைப்பு 
அம்பாள் பார்வையை மறைக்காமல் வெளியில் செல்லும் பாடியுள்ள ஜன்னல் கீழே நாட்டியமங்கைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் சிற்பம்

வெளிப்ராகாரம்
வெளிப்பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமயத முருகன்
சாயாவனனாதர்  , அம்பாள், நடராஜர் , சண்டிகேஸ்வரர்  விமானங்கள்
நவகிரகங்கள் சன்னதியும் வைரவர் சன்னதி உள்ள பகுதி
தேர்போன்ற வடிவின் காட்சி

உட்புறத்தில் அஷ்டஇலக்குமியின் தோற்றம்
வில்லேந்திய வேலவன்: 
இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். இந்த முருகன் ஒருமுகத்துடன் நான்கு கரத்துடன்  கையில் வில் அம்புடன் காட்சிதருகிறார். உடன் மற்இரு கரத்திலும் சேவற்கொடி , வேல் ஏந்தி கட்ட்சிதருகிறார் .எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

வில்லேந்திய வேலவர்
வில்லேந்திய வேலன் சன்னதி

தலவராலறு :

                          ஒருமுறை இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர் பூமிக்கு வந்தார். தாயைக் காணாத இந்திரன், அவர் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். இந்திரனின் தாயார்  தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.அப்போது  கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவி ஈசனுக்கும் தெரிவித்தாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் அங்கு தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார். ஐராவதம் தேரை இழுக்க முயற்சித்த பொது தன் தந்தம் பூமியில் பட்டு கீர் நீர் வெளிப்பட்டு உருவானதே இங்குள்ள ஐராவத தீர்த்தம்  . சிவபெருமான் கூறியபடியே தினமும் மாலையில் இந்திரன் இங்கு வந்து ஈசனும் பூசை செய்வதாக ஐதீகம்.
சாயாவனநாதர் சன்னதி
தில்லை கூத்தன் சன்னதி
சாயாவனநாதர் சன்னதியின் உட்புறார சிற்பங்கள்
குயிலினும்இன்மொழியம்மை 
வெளிப்பிராகாரத்தில் உள்ள வைரவர்
வெளிப் பிராகாரத்தில் உள்ள இந்திரன் சன்னதி
இயற்பகை நாயனார் வரலாறு :

                                63 நாயன்மார்களில் ஒருவரான  இயற்பகை நாயனார். இவர் பிறந்து, வளர்ந்து ,முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவி கற்பினுக்கரசியாரும் சிறந்த சிவ பக்தை.  இயற்பகையார் சிவனடியார்கள் வேண்டும் பொருளையும் பொன்னையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து சிவத்தொண்டு செய்து வந்தார் .இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், ""நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,'' என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், ""நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார்.
                                  
                                 இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ""நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்'' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி,""நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க'' எனக்கூறி மறைந்தார்.அவ்வாரே அவரும் அவர் துணைவியும் சிறப்புற பல தொண்டுகள் புரிந்து இத்தலத்தில் இருந்து கைலயம்பதி சென்றடைந்தனர் .மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.
இயற்பகையார் மற்றும் அவர் மனைவி வெளிப்பிராகாரத்தில் உள்ள சன்னதி

இறைவன் இயற்பகையாற்கும்  காட்சி நல்கிய ஓவியம்  இறைவன்சன்னதிக்கும்முன் உள்ள ஓவியம்
திருவிழா :
  • சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. 
  • ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு.
  • சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல்.
  • வைகாசியில் குமரகுருபரர் பூஜை.
  • மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.
பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷபத்தின் மீது
ஆலயத்தோற்றம் :

          கோபெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் "யானையால் புக முடியாத கோயில்' என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும். இந்த ஆலயம் தேர் வடிவில் ஆனது .இங்கு 13 கல்வெட்டுகள் உள்ளன.சோழர்காலக் 10 கல்வெட்டுகளும் பாண்டியர்கள் கால 3 கல்வெட்டுகளும் உள்ளன .கோயில் குளத்திற்கு தெற்கில்  அமைந்துள்ளது.  மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் ,மங்கையர்க்கரசியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன.அடுத்துள்ள நால்வர் சன்னதியில் "மூவர் முதலிகளே' உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சற்று பெரிய உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளனஅம்மன் சன்னதியை தனியாக உட்புராரம் வலம்வரும் வகையில் அமைந்துள்ளது . அம்மையின் பார்வையை மரிக்காமல் பார்வை வெளியில் படும்படி கற்ஜன்னல்  எதிரில் அமைத்துள்ளனர் .அதேபோல் ஜன்னலுக்கு கீழே நாட்டிய மங்கைகள் இசைக்கருவிகள் வாசிப்புக்கும் ஏற்ப ஆடும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியை காணலாம் . அம்மனின் சன்னதிக்கும்  சிவபெருமான் சன்னதிக்கும் நடுவில் 3அடி முருகன் வில் ஏந்தி காட்சி தருகிறார்  முருகன் . சிவபெருமான் சன்னதிக்கும் மேல்புறம் இயற்பகை நாயனார் தம்பதிக்கு சிவபெருமான் உமையாளோடு விடையேறி காட்சி தரும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது . சிவபெரும்மன் சன்னதியில் உட்புறம் வலம்வரும் வகையில் காற்றோட்டமாக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் சன்னதிக்கும் அருகிலே நடராஜர் சந்நிதியும் அமைத்துள்ளது .
இந்த ஆலயம் மிகவும் அமைதியான ஒரு தலம் . இங்கு வந்து வழிபடுவது மிகவும் புண்ணிய தலமாகும் . காசிக்கும் நிகரான ஒரு தலம்.இக்கோயில் காலை 7 மணி முதல் 12மணி வரையும் மாலை 4 மணி முதல் 8மணி வரை திறந்திருக்கும் கோயில் .
ஐராவத தீர்த்தம்

சாயாவனநாதர்
வழித்தடம் :
இந்த ஆலயம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது .சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம். மாயவரம் மற்றும் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் அணைத்து பேருந்துகளும் இந்தஆலயத்தை கடந்தே செல்லவேண்டும் .

சாயாவனநாதர் ஆலயமுகப்பு பகுதி
ராஜகோபுர தோற்றம்

                        சாயாவேஸ்வரர் ஆலயம் பூம்புகார் கடற்கரைக்கும் செல்லும் வழியில் உள்ளது . இந்த ஆலயத்தின் அருகில் சாம்பாதிக்கோயில் உள்ளது . இந்த சாம்பதி கோயில் அம்மனே பூம்புகார் நகரின் காவல்தெய்வம் . இந்த ஆலயம் பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது . சிலப்பதிகாரச் சான்றுகளுள் இந்த ஆலயமும் ஒன்று . சாயாவனத்தில் இருந்து அரைக் கிலோமீட்டர்  தொலைவு பூம்புகார் செல்லும் வழியில் பட்டினத்தார் கோயில் உள்ளது பல்லவனிஸ்வரர் கோயில் உள்ளது. அருகில் மற்றொரு சிலப்பாதிகார சான்றாக இந்திரவிகாரம் . நாட்டுகோட்டை நகரத்தார் மடத்துக்கும் அருகிலயே உள்ளது . சாயவனத்தில் இருந்து மாயவரம் சாலையில் அரைக்கிலோமீட்டர் பயணித்தால் பத்தினிக்கோட்டம் உள்ளது . இந்த புகுதியின் பெயர் மேலையூர் . பூம்புகார் கடற்கரையை பார்க்க செல்லும்போது வழியில் உள்ள இந்த ஆலயத்தையும் மறக்காமல் தரிப்போம். கீழ்பெரும்பள்ளம் , திருவெண்காடு செல்லும்போது இந்த ஆலயத்தையும் முடிந்தவரை கண்டு வழிபடுவோம் . திருவெண்காட்டில் இருந்து 5 கீமீட்டருக்குள் இந்த ஆலயத்தை அடைந்துவிடலாம் . கீழப்பெரும்பள்ளம் செல்லும் வழியில் பூம்புகாருக்கும் அருகிலே இந்த ஆலயம் உள்ளது . பெரிய ஆலயத்திற்கு தான் சென்று நாம் திரளாக சென்று சாரைசாரையாக சென்று வழிபடுகிறோம் . இதுபோன்ற சிறு ஆலயத்திற்கும் சென்று வழிபடுவோம். புகழ்பெற்ற ஆலயத்திற்கும் செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களையும் நாம் தரிசித்து வருவோம் .இறைவனின் திருவருளால் இந்த ஆலயத்தில் நான்கு கால பூசைகள் நிகழ்த்து வருகிறது . ஆலயத்தை தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரித்து வருகிறார்கள்.

--ஆ.தெக்கூர் இராம.நா.இராமு


Sunday 30 November 2014

கடற்கரையில் விந்தையா மாந்தர்கள்







 சென்னையின் முக்கியமான ஒரு பகுதியின்  வழியாக வாரத்தின் தொடக்க நாளான ஞாயிறு அன்று காலையில்  என் நண்பனுடன் ஈருருளியில் (பைக் ) துரைபாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கும் செல்லும் பயணத்தின் பொது சில காட்சிகள் மனதிலும் பதிந்து நின்றது . உலகின் மிக நீளமான கடற்கரையில் நம் மெரீனா கடற்கரை13கீமீ கொண்ட ஒரு கடற்கரை .உலகின் இரண்டாவது நீளமான கடற்க்கரை. சென்னையின் முக்கியமான அடையாளங்களில் இந்த பகுதியும் ஒன்று . மெரினா கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்து நாம் காணமுடியும் .தலைமைச்செயலகம் முதல் கலங்கரைவிளக்கம் வரை பயணத்தில் பொது  காலையில் கடந்தபோது இருருளியை வேகமாக ஒட்டாமல் மெதுவாக மெரினாவை கடந்தோம் .

 நடைமேடைகளில்ஆண் பெண் என்றுவேறுபாடுகள் இல்லமால் முதியோர்கள் , இளைஞர்கள் ,குழந்தைகள் என்று வேறுபாடுகள் கடந்தும் மக்கள் குழுமியிருந்தார்கள், தொளதொளவென பருத்தியுடைகள் அணிந்தும் , விளையாட்டு சீருடைகள் , முக்கால்ச்சட்டை ,கால்சட்டை போன்ற ஆடைகளில் , ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து காதுகளில் ஹீட்செட் போட்டுகொண்டு நடைபயிற்சி செய்கின்றனர் சிலர் தங்கள் செல்ப்பிராணிகளுடன் நடைபயிற்சியும் செய்த்கின்றனர் .சிலர் கைகளை முன்னுக்கும் பின்னுக்கும் வேகமாக வீசக் கொண்டு நடந்தனர் .மற்றும் சிலர் கைகளை சுழற்றிய படியும் நடந்தனர் . வெவ்வேறு விதமாக மக்கள் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

இந்த சலசலப்புக்கும் மத்தியில் சிலர் வானமே கூரையாக கொண்டு கடல்காற்றையே தங்களின் வீட்டு குளிர்சாதனமாக காற்றுக் கருவியாக கொண்டு போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கும் சாமானியர்களும் உள்ளனர் . மேலும் சில முதியவர்களும் ஆங்காங்கே எடை கருவியை வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிழலில் ஓரமாக அமர்ந்துகொண்டு இருந்தார்கள்.

கடற்கரை ஓரம் மணல்பரப்புகளில் ஆடவர்களும் யுவதிகளும் தனித்தனியாக ஆங்காங்கே கடற்கரை கைபந்து (பீச் வாலிபால் ) மிகுந்த கரகோசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள் .சற்றுதொலைவில்புரவிகளின் மீது காவல்த்துறையினரின் குதிரைபடியினர் ஆங்காங்கைங்கே புரவியில் மீது  உலாவி கண்காணிப்பில் இடுபட்டு கொண்டிருந்தனர் .சிலர்விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டிகள் ஓட்டி பயிற்சி செய்துகொண்டிருந்தனர் .மேலும் சிலர் குழுவாக நின்று குலுங்கி குலுங்கி சதம்மாக சிரித்து கொண்டிருந்தனர் .அதன் பெயர் சிரிப்பு யோகாவாம் (லாபிங் தெரபி ) என்று இதுபோன்றும் ஆங்காங்கே செய்து கொண்டிருந்தனர்

மேலும் சிலர்  கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் காட்சி (ஸ்கேட்டிங் )சாலையின் ஓரத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தனர் .மக்கள் சற்றுநகர்ந்த பொது அங்கு ஒரு தள்ளுவண்டியில் கத்தாளை சாறு , அருகம்புல் சாறு மற்றும் பல இயற்கை மூலிகை சாறுகள் கண்முன்னே தயாரித்து குறைந்த விலைக்கும் தருகிறார்கள். உடன் அருகில் பச்சை தேநீர் , மூலிகை பொடிகள் விற்பனையகம் இதுபோன்ற கடைகள் அங்காங்கே கடற்கரை சாலையோரம் இருந்தன .

மேற்கொண்டு பயணத்தின் பொது சில யுவதிகளும் ஆடவர்களும் கடற்க்கரை மணலில் சிலம்பு பயிற்சிகள் செய்து கொண்டிருந்தனர் . சற்று தொலைவில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் .அதன் சற்று தொலைவில் கபடி பயற்சியும் நடந்துகொண்டிருந்தது  மேலும் சிலர் மணற்பரப்பில் விரிப்பு விரித்து அதன் மேல் யோகாசன பயற்சியும் செய்துகொண்டிருந்தனர் .
கடற்கரை ஓரத்தில்

கடற்கரை சாலையோரம் பல ஈருருளிகள் , மகிழுந்துகள் என்று பல வாகனங்களில் மக்கள் வந்தும் போனதுமாக இருகின்றனர் .இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் ஒரு கடற்கரை ஓரமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் உடல்நலத்தை பேணவும் தங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் இங்கு  இந்த 6 கிலோமீட்டர் பரப்பலவும் கொண்ட கடற்கரை சாலையோர பகுதியை பயன்படுத்துகின்றனர் .என் பயணத்தில் ஈருருளியை வேகமாக செலுத்தி இருந்தால் நாங்கள் அந்த பகுதியை விரைவாக கடந்து சென்றிருப்போம் . ஆனால் தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை வண்டியை மெதுவாக செலுத்தி வாடைகாற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி பொறுமையாக வித்தியாசமான மனிதர்களின் செய்கைகளை கண்டு ரசித்தபடி நிதானமாக இருபது நிமிடம் பொறுமையாக பயணித்தோம் .ஆரவாரமான இந்த சென்னையில் இப்படியும் தங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள இத்தனை ஆயிரம் மக்கள் இங்கு குழுமுகிறாகள் காலை 5 மணிக்கு தொடங்கி   9 மணிக்கு குள் இந்த ஆரவாரம் அடங்கி விடுகிறது .எனது பயணதில் 7.30மணியளவில் நான் கடந்த பொது இவற்றை கண்டு ரசிக்க நேர்ந்தது .

கலங்கரைவிளக்கம்
                                                                  ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Monday 24 November 2014

என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 1

நான் கண்ட என்மனதில் நீங்கா இடம்பெற்ற ஆலயம் பற்றிய வராலாறுகள் சிறப்புக்கள் பற்றி தொகுத்து இங்கு எழுத முயல்கிறேன் .அப்படி ஒரு ஆலயம் இந்த திருவதிகை ஆலயமே முதல் தொகுப்பாக இங்கு பகிர்ந்துகொள்ளகிறேன் .

ஆலய முகப்பு

ஆலய முகப்பு பகுதி

                        திருவதிகை அழகிய தமிழ் பெயர் கொண்ட ஒரு கிராமம் கெடிலம் ஆற்றின் வடகரைப் பகுதியிலும் பண்ணுருடி எண்ணு ஊருக்கும் அருகில் உள்ளது . இந்த திருவதிகை கடலூருக்கும் பண்ணுருட்டிக்கும் இடையில் உள்ளது .  பண்ருட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள மிகவும் அழகிய ஒரு சிற்றூர் . இங்கு மிகவும் தொன்மையான ஒரு சிவாலயம் உள்ளது .சைவ சமயத்தின் மிகவும் பெரும்பங்கு வகித்த திருநாவுகரசர் சைவத்தை தழுவிய தலம் . சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத்தில் இந்த தலமும் ஒன்று .என் தந்தை படித்ததும் வளர்ந்ததும் திருவதிகைகும் அருகில் உள்ள பண்ருட்டியில் தான் . என் ஐயா பல முறை மாலை வேளைகளில் சென்று திருவதிகையில் இறைவனை வழிபட்டு பொடிநடையாக திரும்புவார் .ஐயா திருவதிகை பற்றி சொல்லிக் கேட்டதுண்டு. பிரதோஷத்தின் பொது தவறாமல் சென்று வழிபடுவது வழக்கம் இன்று ஐயாவின் வயது இன்று ஆலயம் சென்று வழிபட்டு வர ஒத்துழைக்கவில்லை . வீட்டிலேயே பிரதோஷ பாடல்களை படித்து வழிபாடு செய்துவருகிறார் . எங்க அப்பச்சி இளமை பருவங்களில் தன் தோழர்களுடன் சென்று விளையாடியது சுற்றிபார்த்த பகுதி .என் சிறுவயதிலும் நானும் சென்று பார்த்து வியந்த தலம்.  நான் 15 வருடங்கள் முன்பு ஒரு மாலைப்பொழுதில் அப்பச்சியுடன் சென்றபோது நான் கண்ட ஒரு காட்சி இன்று யாரும் பார்த்திருக்க முடியாத ஒன்று . சிவபெருமானை உட்பிரகாரம் வளம் வரும் வகையில் சிறிய ஒரு பாதை இருந்தது . இருக்கிறது உடல் பருமனாக உள்ளவர்கள் சுற்றிவர இயலாது படியோறு குறுகிய பாதை .இன்று இந்த பாதை மரக்கதவுகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது . ஆணவத்தை அழிக்கும் ஈசன் இவர் .ஆணவம் கொண்டவர்கள் மீண்டும் இங்கு வந்து ஈசனை காணஅனுமதி மறுத்திடும் ஈசன் இவர் என்று என் ஐயா சொல்ல கேட்டுளேன் . இந்த தலம் கைலாயதிருக்கு நிகரான ஒரு தலம்.

                                திருஅதிகை என்ற பெயர் மருவி இன்று திருவதிகை இந்த தலத்திற்கும் இப்பெயர் வரசில காரணங்கள் கூறப்படுகிறது. தமிழகத்தில் சைவம் தழைக்கும் முன் சமணம் ஓங்கி வளர்ந்து  இருந்தது. சமணக் குருமார்களை அதிகைமான்கள் , நந்திகள் என்றும் சமணப்பெரியோர்களை அழைப்பட்டதும் அந்த பகுதிகளில் அவர்கள் வாழ்ந்திருக்ககூடும் அதன்காரணமாக இந்த ஊருக்கும் திருஅதிகை என்று  வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன .திருவதிகை ஆலயம் முற்காலத்தில் வெறும் ஆலயமாக மட்டும் இல்லது வைத்தியசாலை பண்டகசாலை , கலைகூடமாகவும் ,அறச்சாலை , பாடசாலை , அரசாங்க அலுவலகமாகவும்  இந்த ஆலயம் விளங்கியுள்ளது . இந்த ஆலயம் ஆயுதக் கிடங்காகவும் விளங்கியுள்ளது . இந்த ஆலயத்தில் சுரங்கப்பாதைகளும் இருந்துள்ளன. இப்படி இந்த ஆலயம் வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் அனைத்து துறையும் சங்கமிக்கும் ஒரு கூடமாகவும் விளங்கியதன் விளைவு பல முறை போர் படையெடுப்புகள் மூலம் அழிவுகளை சந்தித்தது இவற்றை கண்டு அஞ்சி திருவதிகையில் வாழ்ந்த  மக்கள் படைஎடுப்புக்கு பயந்து தற்போது உள்ள பண்ணுருடியில் குடியேறினர்.
ஆலய சுவற்றில் 



ஆலயத்தின் வெளிப்புற தோற்றம்

நாட்டிய  பெண்கள்


ஆலய வாயிலில் உள்ள சிற்பங்கள்

இரண்டாம் ராஜகோபுரத்தின் முன்பு இருந்து 


ஆலயத்தின் உட்புறத்தில் இருந்து ராஜகோபுர தோற்றமும் 16 மண்டபமும் ஒரு பௌர்ணமி பொழுதில் 
             
16 கால் மண்டபம் ஆலயத்தில் நுழைந்தது 
16கால் மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தீர்த்தத்தின் நுழைவாயில் 

       நடுநாட்டில் உள்ள 22 சிவாலயகளில் மிகவும் புகழ்வாய்ந்தது.இந்த ஆலயம் எந்த நூற்றாண்டை சார்ந்தது என்று சரிவர புலப்படவில்லை  இந்த ஆலயம் பல மன்னர்கள் படையெடுப்பில் புனரமைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பல மாற்றங்கள் செய்யப்பட்டும் உள்ளது பற்றி இக்கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன . இத்தல ராஜகோபுரம் அமைப்பு தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுர அமைப்பை ஒத்தது . இந்த கோபுர நிழல் காலில் மிதிபடாத வகையில் கணித சாஸ்திரமுறைப்படி வடிவமைகபட்டுளது. இந்த விமானத்தை வடிவமைத்த பெருமை பல்லவ மன்னர்களையே சாரும் .இவர்களுக்கு பின் வந்த பல்லவ மன்னர்களான பரமேஸ்வரவர்மன் இந்த ஆலயத்தை முழுவது கற்கோவிலாக மாற்றினான் அதுமட்டும் இல்லது சுண்ணாம்பு சுதை சிற்பவேலைபாடுகளை அமைத்தவராவார்.  மேலும் நாம் இன்று ஆலயத்தில் கருவறை முகப்பு பகுதியில் உள்ள துவாரபாலகர்கள் அமைப்பு முதலில் இங்கு இருந்து தான் தோன்றியது என்பது இந்த கோயில் கல்வெட்டுகள் முலம் புலப்படுகிறது. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் சமணத்தில் இருந்து சைவத்தை தழுவியது இந்த தளத்தில்தான் . மகேந்திரவர்மனின் ஆட்சி காலம் ( கிபி 615 -63௦ ) ஆகும் .இந்த காலகட்டத்தில்தான் நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கும் மாறினார் . மேலும் இந்த மன்னன் செங்கல் , மண் , சுண்ணாம்பு , மரம் இவைகள் மட்டும் இன்றி கருங்கற் திருப்பணியும் செய்வித்தவர் ஆவர்
நடராஜர் மண்டபம் 1௦௦ கால் மண்டபம் 
இரண்டாம் ராஜகோபுரம் கொடிமரத்தின் தோற்றம் 

வாயிலுக்கும் முன்புறம் உள்ள வராகி 
கொடிமரத்திற்கும் முன்பு உள்ள நந்தி 
இரண்டாம் ராஜகோபுரம்

உட்புறத்தில் இருந்து கொடிமரத்தின் தோற்றம் 

மேலும் இவர்களின் வழிவந்த பல பல்லவ மன்னர்கள் தொண்டாற்றியும் பலாயிரம் பொன்னையும் தானமாக வழங்கியும். இங்கு அன்னசத்திரம் அமைத்தும் ஆலயத்துக்கு வரும் சாதுக்களுக்கும் பசியாற அன்னசத்திரம் அமைத்தும் நாவுக்கரசரின் பெயரில் மடம் நிறுவியும்  சிறப்பு செய்தனர். அதன் பின் பல்லவனின் வழிவந்தவர்கள் சோழர்கள் இந்த ஆலயத்திற்கும் பல அர்பணிகள் செய்துவந்தனர் . பல்லவர்கள் காலத்தில் இங்கு இந்த ஊரை சுற்றி உள்ள பகுதிகளில் பல புத்தவிகாரங்கள் , பாழிகள் , பள்ளிகள் இருந்ததை உணரும் வகையில் இந்த ஆலயத்தில் மூன்று இடங்களில் புத்தர் சிலைகளை காணலாம் .
                    இக்கோயில் பல மன்னர்கள் தாக்குதல் நடத்தினர் அதுமட்டும் இல்லது இந்த கோயில் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த பகுதி மாரட்டியர் வசமும் . அதன்பின்  முகலாயர்களின் வசமும் சென்றது . 18ஆம் நூற்றாண்டின்  போது பிரெஞ்சுகார்கள்  வசமும்  இருந்தது அப்போது இந்த ஆலயம் போர்காலக்கொடையாக பயன்படுத்தப்பட்டது . மற்றும் இந்த பகுதி பிரிட்ஷ் வசமும் சென்றது . இந்த காலகட்டங்களில் இந்த ஆலயத்தில் விலை உயர்ந்த அணிமணிகள் , அரியபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன .  மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் மன்னருக்கும் பின்னோர் என்றுசொல்லப்பட்ட நாட்டுகோட்டை நகரத்தார் சமுகத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலை புணரமைத்து குடமுழுக்கும் செய்தனர் 


ஸ்தல விருட்சம் கொன்றைமரம் . மற்றும் அதன் மருத்துவப்பயன்கள் மற்றும் கொன்றைமரத்தை ஸ்தலவிருட்சமாக கொண்ட தலங்கள்பற்றிய தகவல் 
நந்தி தேவர் 
ஆலயத்தின் உட்புறத்தில் கொன்றைமரத்தடியில் உள்ள பெரிய லிங்கம் 

உட்புறத்தில் உள்ள நந்தி தேவர் 



திருத்தலச் சிறப்புகள்: 

சிவபெருமான் வீரத்திருவிளையாடல் புரிந்த எட்டுத் வீரட்டத்தலங்களுள் இத்தலமும் ஒன்று.

 நாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் ஈசனுக்குத் திருத்தொண்டு புரிந்த தலம்.

திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்த பதி. ஞான சாத்திர நூலான உண்மை விளக்கத்தை அருளிச் செய்தவரும், மெய்கண்ட நாயனாரின் மாணவர்கள் 49ல் ஒருவருமான மனவாசகங்கடந்தாரின் அவதாரப்பதி. 

மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். 

முப்புரங்களை எரித்த வீரச்செயல் புரிந்த தலம்.

திருநாவுக்கரசர் தனது முதல் தேவாரத் திருப்பதிகம் பாடி  சைவப்பெருநெறிக்கு மீண்டு வந்தது இத்தலத்தில்தான்.

சிவபிரான் உமையாள் கையை பற்றிய படி திருமணக்கோலத்தில் அருள் புரிந்த அப்பர்பெருமானுகும் திருக்காட்சி புரிந்த தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம்.

 சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தார் பிறந்த தலம் இதுவே.

அப்பர் பெருமான் உழவாரப் பணி புரிந்த தலம் இதுவென்று இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் இறைவனின் திருவடி தீட்சை பெற்றதும் இத்தலத்தில்தான்.

திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் திருநடனம் புரிந்த்தது இத்தலத்தில் தான் .

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவநெறிக்கு மாறி சமணப் பள்ளிகளை இடித்து குணபரவீச்சரம் எழுப்பியது இத்தலத்தில்தான்.

இந்த ஆலயத்தை பார்த்தே ராஜா ராஜா சோழன் பெருவுடையார் கோயிலை தஞ்சையில் அமைத்தார்

தேர் திருவிழா உருவாக வித்திட தலமும் இதுவே.

தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.

ஆலய உட்புறம் 


தல வரலாலு  : 

                    தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் உள்ள 63நாயன்மார்கள் சந்நிதிகள் 
கருவறைக்கும் செல்லும் வழியில் உள்ள உலகின் முதல் முதல் அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலைகள்
தீர்த்தக் கிணறு 
மூன்று அசுரர்களும் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புறங்களையும் வைத்துக்கொண்டு அவர்கள் தேவர்கட்கும் முனிவர்கட்கும் தொல்லைகள் பல கொடுத்துக் கொண்டே வந்தனர். தேவர்கள் ஈசனின் தாழ் பணிந்து புகலிடம் கேட்டனர்.
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள லிங்கத் திருமேனிகள் 
பஞ்சமுக லிங்கம் 


                                      ஈசன் தேவர்களைக் காக்கப் பூமியை தேராக்கி, நான்கு வேதங்களை குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய, சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும் வானவர்களையும் போர்கருவிகளாகவும் உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து தேர் தட்டில் கால்வைக்க அதன் அச்சு முறிந்தது. ள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகின. இச்சம்பவம் நடந்ததுதான் திருவதிகை. சிவபிரான் தேவர்கள் வானவர்கள் உதவி ஏதும் இன்றி தன் புன்சிரிப்பால் அசுரரின் ஆணவத்தையும் தேவர்களது மமதையையும் ஒருசேர அழித்த தலம்

                            அரக்க மன்னர்கள் மூவரும் சிவபூஜையைத் தவறாது செய்து வந்ததை எண்ணி இருவரைத் தமது வாயில் காப்போராகவும் ஒருவரைக் குடமுழா முழக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டு ஈசன் மறைந்தார். இவ்வாறு மறக்கருணையோடு அறக்கருணையும் புரிந்த பெம்மானின் மூர்த்தத்தை வழிபடும் க்ஷேத்ரம் திருவதிகை. இந்த நிகழ்வே திரிபுர சம்ஹாரம் ஆகும்.
கைலாச பர்வத வாகன காட்சி 
கருவறை விமான சுதை வேலைப்பாடுகள்

திரிபுர சம்ஹார மூர்த்தி 

ஆலய கருவறை விமானம் 
அக்னி தேவன் 


திருநாவுகரசர் ( அப்பர் ) பெருமான் வரலாறு :

                 திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் ( திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் ) என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும் மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வந்தார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலை நோய் தாக்க அவன் துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிக்சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் பாடி முடித்தபின் சூலை நோய் நீங்கப்பெற்று நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
ஆலயத்தின் விமானங்கள் 

நடராஜர் மண்டபத்தில் உள்ள வைரவர் 



விழாக்கள் :

                திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா சித்திரை சதயத்தில் நடைபெறுகிறது. விரிசடைக் கடவுள் என்று பழைய தமிழ் நூல்கள் சிறப்பித்துக்கூறும் பெருமை உடையது.

              ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம்நடைபெறுகிறது .
ராமலிங்க அடிகள் அம்பாள் மீது இயற்றிய திருவருட்பா 
கோயில் அமைப்பு : 

                     இவ்வாலயம் மிகப்பெரிய ஆலயம் ஆகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடன் 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள திறந்த வெளி முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும் வடப்பக்கம் பத்மாசக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 5 நிலைகளையுடைய 2வது கோபுர வாயிலில் உள்ள ஒரு பெரிய நந்தியின் உருவச்சிலை காணப்படுகிறது. 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித்தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர் சனீஸ்வரர் மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி சந்நிதி இருக்கிறது. அம்பாள் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் காணப்படுகிறது.உள்சுற்றில் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் காணவேண்டிய ஒன்றாகும். இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய பஞ்சமுகலிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.

இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலத்தில் இத்தலம் 218வது தலம்.இங்கு உள்ள சிவமூர்த்தம் 16பட்டைகள் கொண்ட மூர்தமாகும் .
சுதை வேலைபாடுகள் 



இத்தலத்தில் இறைவன் பெயர்  : வீரட்டேசுவரர்,  வீரட்ட நாதர், அதிகைநாதர்
அம்மையின் பெயர்  : திரிபுரசுந்தரி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் கெடிலநதி, சூலதீர்த்தம் (குளம் ), கிணறு திர்த்தம்
அம்பாளும் சிவனும் 
பதிகம் பாடியவர்கள்

திருநாவுக்கரசர் - 16
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1

அதிகை வீரட்டான ஈசன்

                          திருநீறு பூசும் பொது பொதுவாக அண்ணார்ந்து பார்த்து திருநீறு பூசவேண்டும்.ஆனால் இங்கு வழங்கும் திருநீற்றை தலைகுனிந்து பூச வேண்டும் என்பது இந்தலத்தின் தனி சிறப்பு .இங்குள்ள அம்மை மீது இராமலிங்க அடிகள் (வள்ளாளர் ) மீது திருஅருட்பா பாடியுள்ளார்.இங்கு அம்பாளுக்கும் பாதத்தின் அருகே ஸ்ரீ சக்கரம் வைத்து பூசைகள் நிகழ்கிறது.
இத்தலம் சில ஆண்டுகள் முன்பு மீண்டும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நிகழ்ந்தது .இந்த ஆலயத்திற்கும் வரும் வழியில் ஒரு திருநந்தவனம் திலகவதியார் பெயரில் உள்ளது அங்கு அவர்க்கும் ஒரு சிறுமண்டபமும் அங்கு தினமும் திலகவதியருக்கு காலை மாலையென இரு வேளையும் விளகேரிக்கப்படுகிறது . இங்கு அப்பருக்கும் சிவபெருமான் திருமணக்காட்சியை காட்டியதால் இங்கு கோயிலும் அருகில் பல திருமனமண்டபங்கள் நிறுவியுள்ளனர் .இங்கு திருமணம் அதிகம் நிகழ்கிறது இங்கு பல புதுமணதம்பதிகள் வந்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து வழிபடுவதால் அவர்களின் வாழ்வு இனிமையாக அமையும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை .இத்தலத்து இறவைனின் திருத்தேர் முற்றிலும் பழுதுபட்டது .தற்போது குடமுழுக்கின் பொது தேர் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்துவைக்கப்பட்டடுள்ளது .
                     இங்கு ஆலயத்தின் உள்ளே புதிதாக 27 நடசத்திர லிங்கங்களும் அவற்றுக்கான விருட்சங்களும். அந்த நட்ச்சதிரம் பற்றிய விபரம் அடங்கிய பலகையும் நிறுவி உள்ளனர்  இங்கு அருகிலேயே ஒரு வராகி சிலையும் கிழக்கும் நோக்கி உள்ளது .மேலும் இங்கு நவக்கிரக விருடங்களும் அவற்றின் குணம் பற்றிய பலகையும் வைத்துள்ளனர் .இங்கு நடராஜர் மண்டபத்தின் அருகில் 13 இலைகளை கொண்ட வில்வவிருட்சம் உள்ளது .இங்கு மாலையில் பலர் தியானப்பயிற்சி , யோகாபயிற்சி செய்கின்றனர் .இந்த ஆலயம் மிகவும் அமைதியாகவும் மனதிற்கும் நிறைவாகும் உள்ள ஒரு ஆலயம்.அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு ஆலயம் .ஆலயத்திற்கு சென்றால் அங்கு சிற்பிகள் செதுக்கிய கலை வேலைப்பாட்டை சற்று கண்கொண்டு ரசித்து பார்த்துவிட்டு .இறைவனை தொழுதுவிட்டு முடிந்த வரை அசுத்தம் செய்யாமல் தூய்மையாக வைத்து பாதுகாப்போம் .

                          மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்

                                                              --- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு