Wednesday 26 August 2020

கதை சொல்லும் செட்டிநாட்டுச் சுதைகள்

 

தமிழ்நாட்டில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளையும் சிவகங்கை மாவட்டத்தில்  காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 76 ஊர்களை உள்ளடக்கிய பகுதியை  செட்டிநாடு  என்றழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற நகரத்தார்களின் செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. இவ்வீடுகள் அனைத்துமே மிக உயரமான தளம் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. உலகளாவிய பாரம்பர்யங்களின் தாக்கங்களினால் நகரத்தார்கள் தங்கள் கட்டிடக்கலையையும் மேம்படுத்தினர். நகர்ப்புறத் திட்டமிடல், நீர் மேலாண்மை, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் கலை படைப்பாற்றல் ஆகியவை துல்லியமாகத் திட்டமிடப்பட்டு எல்லா செட்டிநாட்டு கிராமங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டவை.செட்டிநாட்டு வீடுகள் திராவிடக் கட்டிடக்கலை பாணியுடன் இந்தோ இஸ்லாமிக், இந்தோ ஆர்சனிக்  வேலைப்பாடுகளும் இனைந்து அழகு பொலிபவை. செட்டிநாட்டில் வீடுகள் பெரும்பாலும் முகப்பு முதல் வீதியிலிருந்து பின் கதவுகள் இரண்டாவது வீதிக்கு அமையும் இவ்வளவு நீளமாக கட்டப்பட்ட வீடுகள் அகலமும்  விரிந்து நிறைந்ததாகவே இருக்கும் இவ்வளவு பெரிய வீடுகள் கட்டி வாழ தொடங்கியது சென்ற நூற்றாண்டு இறுதியில் கிபி 1850 முதல் 1900 எனலாம் செட்டிநாட்டில் இவ்வாறு வீடுகள் கட்டிய காலத்தை மூன்று கட்டங்களாக பிரிக்க முடியும்.
 19 நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பெரும்பாலும் முழுக்க முழுக்க திராவிட கட்டக்கலையே ஒத்தே அமைக்கப்படன. இவ்வீடுகளில் மேற்புறத்தில் திருமகளை காட்டு வழக்கம் தோன்றியது.சென்ற நூற்றாண்டின் இறுதியில் வீடுகள் கட்டுவது தொடங்கப்பட்டாலும் பெருமளவில் வீடுகள் கட்டப்பட்ட காலம் என்பது 1900 முதல் 1920 வரையிலான முதல் உலகப்போரை ஒட்டிய பல நகரத்தார் குடும்பங்களுக்கு வெளிநாட்டு தொடர்பு குறைந்ததால் 1920 முதல் 1940 வரை வீடுகள் கட்டப்பட்டன என்றாலும் முந்தைய காலகட்டத்தை விட எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.  
முதல் இரண்டு காலகட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் நகரத்தார்களின் கட்டிககலை பாணி வீடுகள் என்று சொல்லலாம் நகரத்தார் பாணி வீடுகள் அமைப்பு பெரும்பாலும் முகப்பு, வளவு, கல்யாணகொட்டகை, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு, அடுப்படி, போஜனஹால், சாலை, கட்டுத்தரை, தோட்டம்  முறையாக வடிவமைப்பை கொண்டிருக்கும்.இவ்வீடுகளில் கவனிக்கத்தக்க வேண்டியது சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் பூச்சு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான வீட்டின் ஒழுங்கமைப்புகள் இந்தக் கட்டுக்கோப்பான சமூகத்தின் கட்டமைப்பைக்  கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது. தெற்காசிய நாடுகளுடமும் ஐரோப்பிய வணிகத் தொடர்பு ஏற்பட்டதன் பயனாக 1900 பின் கட்டப்பட்ட வீடுகள்  தெற்காசியா மற்றும் ஐரோப்பிய தாக்கத்தை தன்னகத்தே உள்வாங்க துவங்கியது அதன் வெளிப்பாடாக வேலைப்பாடுகள் அமைந்த பர்மா தேக்கு கதவுகள் ஜன்னல்கள் பெல்ஜியம் கண்ணாடி பதித்த கதவுகள், இத்தாலிய மார்பில், கூரையில் பூ வேலைப்பாடுகள், கொத்து விளக்குகள், என வீட்டை அழகுபடுத்தினர். 
வீடுகளின் நுழைவாயில்களில் மேற்புறதில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் இக்காலகட்டத்தில் மெல்ல மாற்றம் பெருகின்ற அவற்றுடன் மேலைநாட்டவர்கள், கந்தர்வர்ள், சேடிப்பெண்கள், பட்சிகள், விலங்குகள் என்றும் ரவிவர்மா பாணியில் இறைவனின் உருவங்களை சுதையால் சமைத்தல் என்பது நகரத்தார் கட்டிடக்கலையின் தனித்துவமாக பார்க்கமுடிகின்றது மற்றும் செட்டிநாட்டு வீடுகளின் நுழைவுவாயிலே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளிலும், அதனைத் தாங்கி நிற்கும் நிலைகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் பார்ப்பவர்களை வியப்படையச் செய்பவை. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கம்மார்களின் கலைத்திறன்களுக்கும் முன்மாதிரியாக அமைந்து உருவாக்கப்பட்டவை. 1940 க்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வீடுகள் கட்டும் போக்கு மாறி சிறிய அளவில் காலத்திற்கு ஏற்ப நவீன பங்களா முறைகளிலும் வீடுகள் கட்டும் பழக்கம் நகரத்தார் மத்தியில் தோன்றியது இவ்வகை வீடுகளை நகரத்தார்கள் அமைப்பதற்கு எழுவங்கோட்டை என்ற பகுதியையில் பெருமளவில் இருந்த கட்டுமான தொழிலாளர்களையும் கம்மாளர்களையே பெரும்பாலும்  பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

 நகரத்தார்களுக்கு வீடுகள் என்பது அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டது கல்யாணம் சடங்கு போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்ததாலும் அதனை தங்கள் வீடுகளிலேயே நடத்த விரும்பியதாலும் நிறைய பேர் கலந்துகொள்ளும் வகையில் பெரிய விருந்துகள் நடத்தும் வகையில் தனித்தனியாக கட்டுகளையும் கொண்ட பெரிய வீடுகளைக் கட்டினர். நகரத்தார்கள் இவ்வளவு பெரிய வீடுகளை கட்டியதற்கான காரணங்கள்  ஒன்று கூட்டு குடும்ப அமைப்பின் ஒவ்வொரு புள்ளியும் தனித்தனியே வாழ்விடங்களையும் அவற்றை நிறைவு செய்யும் வண்ணம் வீடுகள் அமைந்தன. இரண்டாவதாக பருவநிலை மாறுதல்கள் அனைத்திற்கும் எற்றமுறையில் வெவ்வேறு பகுதிகளை கொண்டதாக வீடுகள் வடிவமைப்பு திகழ்கிறது  சிலப்பதிகாரத்தில் கூதிர்பள்ளி, வேனிற்பள்ளி என தனித்தனியாக பள்ளிகளை குறிப்பிடப் பெறுகின்றனர் இந்த பெரிய வீடுகளிலும் வளவு வீடு கூதிர் பள்ளியாகவும் சுற்றுப் பத்திகளும் பட்டா சாலைகளும் வேனிற் பள்ளியாகவும் பயன்படுகின்றன. இவ்வீடுகள் நகரத்தார் சமூகத்தின் கவுரவமாகவுன் பாரம்பரியமாகவும் கருதப்படுகிறது. இவ்வீடுகள் நகரத்தார்கள் வாழ்ந்த கூட்டு வாழ்க்கைக்கு மிகப்பெரிய சான்றாக அமையும்.

 வீடுகளும் சுதைச் சிற்பமும்

இன்று நகரத்தார் வீடுகளை பலரும் வியந்து பார்க்கின்றனர் ஆனால் பெரும்பாலானவர்கள் பார்க்க தவறுவது வீட்டின் முகப்பு பகுதியில் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட சுதைச் சிற்பம் தொகுப்புகளை சற்றே பாராமுகமாய் இன்று பெரும்பான்மையானவர்கள் கடந்து சென்று விடுகின்றனர்.இந்த சுதை சிற்பம் தொகுப்பு நமக்கு பலதரப்பட்ட செய்திகளையும் எடுத்தியம்பும் இந்த சுதைச் சிற்பங்கள் நகரத்தார்களின் வாழ்வியல், சமுகவாழ்வியல், வணிகத் தொடர்பு, போன்ற செய்திகளை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். செட்டிநாட்டு சுதைச் சிற்பங்களை ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் பின் என பிரித்து பார்க்க முடியும்.

ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் இருந்த சுதை சிற்பம் தொகுப்புகள் என்பது  நாயக்கர்கள் மற்றும் தஞ்சை  மராட்டியர்களின் காலகட்டத்தில்  பயன்பாட்டில் இருந்த முறையை ஒன்றிணைத்து செட்டிநாடு காணப்பட்ட சில காட்சிகளைப் இணைத்து உருவாக்கப்பட்ட ஒருவகையான சுதைச் சிற்பம் அமைப்பையே பயன்படுத்தியுள்ளனர். சுதைச் சிற்பங்களை உருவாக்கும் போது உட்புறத்தில் கம்பியை பயன்படுத்தி அதன் மீது சாந்து பூசி உருவங்களை உருவாக்கும் பாணியை முதன் முதலில் துவங்கியது செட்டிநாட்டு பகுதியில் தான். அதற்கு முன்பு இருந்த தஞ்சை மராத்தியர்கள் மற்றும் நாயக்கர் பாணியில் இவ்வாறு உட்புறத்தில் கம்பிகள் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.முற்காலத்தில் சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டவை யானையுடன் கூடிய திருமகளின் வடிவங்களே மேலும் இந்த திருமகளோடு சேடி பெண்களை காட்டும் வழக்கமும் இருந்துள்ளது.சில வீடுகளில் சேடிப் பெண்கள் மட்டுமில்லாது அரசன் அரசியர், காவலர்கள், நாட்டிய மகளிர், பறவைகளின் வரிசை  போன்ற உருவங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. இதில் அரசன், அரசி, காவலர்களின் உருவங்களில் பெரும்பாலும்  மராத்தியர்களின் பாணியில் அமைந்து இருக்கின்றன நடன மங்கையர்கள் சேடிப் பெண்கள் போன்ற உருவங்கள் நாயக்கர் பாணியிலும் தஞ்சைமராத்திய சாயலிலும் அமைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தான் மெல்ல கந்தர்வர்களை சுதையாக காட்டும் வழக்கம் தலை எடுக்கின்றது என்பதனையும் நாம் செட்டி நாட்டில் உள்ள பழமையான சுதைச் சிற்பங்களை பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது.
 நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் முகப்பு பகுதியில் திருமகளின் வடிவமைக்கப்பட்டிருக்கும் திருமகள் வடிவம் பலதரப்பட்ட செய்திகளையும் தாங்கி நிற்கின்றது ஒர் அமைப்பு. திருமகள் உருவம் வளமையின் அடையாளம் இது சைவ வைணவத்தில் மட்டும் ஏற்றகொண்ட ஒரு உருவக அல்லை. திருமகள் செல்வத்தின் குறியீடாக இன்று பார்க்கப்பட்டாலும் இந்திய சமயங்களான சமணம் பவுத்தம் ஆசீவகம் போன்ற எல்லா சமயத்திலும் வளத்தின் குறியீடுகாவே பார்க்கப்படுகின்றது. திருமகள் உருவம் என்பது தொல்பழங்கால  தாய்தெய்வம் / குத்துகல் வழிபாட்டில் இருந்து வந்த ஒன்று அதன் வெளிப்பாடகவே வளமையின் அடையாளமாக நம் வீடுகளில் முகப்பு பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். 1850 முதல் 1910  காலகட்டத்திற்குள் சமைத்த வடிவங்களில்  பெரும்பாலும் திருமகளை சுற்றி திருவாச்சி காட்டும் வழக்கும் காணப்படுகின்றது சில இடங்களில் மண்டபம் காட்டும் வழக்கமும் இருந்துள்ளது. திருமகளின் உருவம் பெரும்பாலும் நாயக்க பாணியிலும் அல்லது மராத்திய பாணியிலும் அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த திருமகள் உருவங்களில் பயன்படுத்தப்பட்ட நகைகள் செட்டிநாட்டு பாணியிலும் அமைந்திருந்தன உடனிருக்கும் சேடிப் பெண்கள்  அதாவது சாமரம் வீசும் பணிப்பெண்கள் செட்டிநாட்டிப்  பெண்களின்  உடைபானியில் அமைக்கப்பட்டனர்.
 1910பின் செட்டிநாட்டு பகுதியின் வீடுகளில் கட்டுமானத்தில் ஐரோப்பிய தாக்கத்தினை மெல்ல உள்வாங்கத் துவங்கியதும் சுதைச் சிற்பங்களும்  மெல்ல ஐரோப்பிய தாக்கத்தை உள் வாங்குகின்றன அதன் வெளிப்பாடாக மாடங்களில் ஆங்காங்கே ஆண், பெண், ராஜா, ராணி, கோமாளிகள், ஐரோப்பியர்கள், விலங்குகளின் முகங்களை காட்டும் வழக்கம் ஏற்படுகின்றது. வாயிலின் மேற்புறத்தில் இரட்டை உருவங்களாக சிங்கம், குதிரைக, யாளி, மான்கள்,காவலாளி போன்ற பலவகையான இரட்டை உருவங்களை காட்டும் பழக்கம் இக்காலகட்டத்தில் இருந்தே துவங்குகின்றன அதற்குமுன் சேடிப் பெண்கள் அல்லது இரட்டை நடனமங்கையர்களை மட்டுமே காட்டும் வழக்கமிருந்தது. இக்காலகட்டத்தில் நகரத்தார்கள் தாங்கள் கொண்டு விற்கச் சென்ற தேசத்தில் கண்ட காட்சிகளை எல்லாம் செட்டிநாட்டு பகுதியை சேர்ந்த கம்மாளர்களை கொண்டு மிக நேர்த்தியா இங்கு காட்ட முற்படுகின்றனர். மேலும் மேல் மடங்களில்  இராமன், வேனுகோபாலர், தாயும்குழந்தையும், ஐரோப்பிய ஆண்கள், பெண்கள், நாயுடன் கூடிய காவலர்கள் போன்ற உருவங்களையும் காட்சி படுத்துகின்றனர். பூ மாரி பொழியும் கந்தர்வர்கள், மாலை ஏந்தும் கந்தர்வர்கள் என்று இந்த கந்தவர்களின் பலவிதமான உருவங்களை காட்டத் துவங்குகின்றனர் இக்காலகட்டத்தில் கந்தர்வர்கள் காட்டும் வழக்கம் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது என்பதனை 1910முதல்1915களுக்கு பின் கட்டிய வீடுகளில் நம்மால் காண முடிகின்றன.

1920 களுக்கு பின் செட்டிநாட்டு சுதை சிற்பங்கள் முழுக்க முழுக்க ரவிவர்மா ஒவிய பாணியையும் சேர்த்து உள்வாங்கி செரித்து அமைகின்றனர். இக்காலகட்டத்தில் வீட்டின் முகப்பு பகுதியில் பலதரப்பட்ட இறையுருவங்கள் காட்டும் வழக்கம் உருவாகியது. ரவிவர்மா ஓவியத்தாக்கம் சுதைச் சிற்பங்களில் உட்புகும் முன்பு திருமகள் உருவம் அமர்ந்த நிலையிலேயே காட்டப்பட்டது அதன் பின் தான் திருமகள் நின்றவடில் காட்டும் சுதைசிற்பங்களில் காடும் வழக்கம் தோன்றியது. பல செட்டிநாட்டு வீடுகளின் முகப்பில் ரவிவர்மா ஓவியங்கள் சுதைகளாக சமைக்கப்பட்டன குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சண்முகர், பிள்ளையார், கஜேந்திர மோக்‌ஷம், வேணுகோபாலர், ருக்மணி சத்தியபாமா சமயத கிருஷ்னர், அல்லி அர்சுனன்  திருமகள், கலைமகள், மீனாட்சி திருக்கல்யாணம், ரிஷபாருடர், யசோதா கண்ணன், பார்வதியுடன் பாலமுருகன், போன்ற உருவங்கள் சமைக்கப்படன. சில வீடுகளில் மேல்புறத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையும் சுதையில் காட்டியிருகின்றனர். அதோடு வீட்டில் இருபுறமும் மாடங்கள் அமைக்கு வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது அந்த மாடங்களில் ஆங்காங்கே கிளிகள், புறாக்கள், பறவைகள் போன்ற உருவங்களை சுதையில் நம்மால் காணமுடிகின்றன சில வீடுகளின் மாடங்கள் அமைப்பதற்கு பதிலாக மேற்புறத்தில் சுதையால் இரதங்கள் செய்து நிறுத்தும் வழக்கமும் இருந்து வந்துள்ளன. இந்த இரதங்கள் தத்ரூபமாக செட்டிநாட்டு வெள்ளி இரதங்களில் காணப்படும் அங்கங்களை ஒன்று விடாமல் அப்படியே  காட்டியிருகின்றனர் இதனை உருவாக்கி செட்டிநாட்டு கம்மாளர்கள். இக்காலகட்டத்தில் சமைக்கப்பட்ட சுதைகளில் ரவிவர்மா ஓவியபாணியை ஒத்து அமையத் துவங்கியதன்  காரணமாக மெல்ல இங்கு நம்வசம் இருந்து தொன்மையான சுதைகள் அமைக்கும் பாணி மறையத் துவங்கியது என்பது வருத்தாமான செய்தியே.
1935களுக்கு பின் கட்டப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் அளவு சுருங்க துவங்கியதும் சில வீடுகளில் முகப்பில் சிறிய அளவில் திருமகள், இயற்கை காட்சிகள், தோரணங்கள், திரைச்சீலைகள் என்றும் சுதைகளின் பயப்பாட்டின் தாக்கம் குறைய துவங்கியது வேறு விதமான பரிமாற்றத்தை நோக்கி நரகத்துவங்கியது. அது சுந்ததிர போராட்ட காலகட்டம் என்பதால் சிலர் தங்களின் சுதந்திர போராட்ட உணர்வை காட்டும் விதமாகவும் வீடுகளின் முகப்பில் பாரதமாதா, காந்தி, நேரு, நேத்தாஜி, போன்ற உருவங்கள்  சுதைகளாக சமைத்து  தங்களின் எண்ணங்களையும் சுதந்திர சுதேசிய உணர்வையும் வெளிப்படுத்தினர். மற்றும் ஒரு சுவையான செய்தி செட்டிநாட்டு கிராமங்களில் ஒவ்வொரு ஊருக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு அதாவது சுதைசிற்பங்கள், கதவுகள்,  கதவுகளின் வர்ணம், மாடங்கள் என்று  எதாவது ஒரு அமைப்பு எல்லா வீடுகளிலும் பொதுவாக அமைப்படும். எடுத்துகாட்டாக குருவிக்கொண்டான்பட்டியில் பெரும்பாலான வீடுகளின் முகப்பு பகுதில் இரட்டை சிங்கம் கர்சனை செய்யும் தோரனையில் நிறுத்தப்பட்டிருக்கும் இது அந்த பகுதியில் மட்டும் சற்று அதிகமாக காணமுடியும்.
நாம் சுதைகள் தானே என்று  கடந்துசெல்கின்றோம் இந்த சுதைகளும் தங்கள் வசம் பல தரப்பட்ட தகவல்களை வைத்துள்ளது. செட்டிநாட்டு வீடுகளில்  உட்புறத்தில் உள்ள தூண்கள், கதவுகள், விளக்குகள், அலங்கார பொருட்கள்  மட்டும் நகரத்தார்களின் வரலாற்றை எடுத்துக்கூறாது அழகுக்காக வீடுகளில் வெளிப்புறத்திலும் வாயில்களில்  சுவற்றிலும் நிறுவப்பட்ட சுதைகளும்  சமகாலத்தின் வாழ்வியல் முறைகளையும் வரலாற்றையும் எடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு தன்வசம் பலதரப்பட்ட செய்திகளை தாங்கி நிற்கின்றன இவை கூறும் செய்திகளை கேட்கவும் அந்த அழகியலை ரசனையோடு  ஏறெடுத்து பார்க்கத்தான் இன்று  ஆட்கள் மிகக் குறைவாக உள்ளனர். பராமரிப்பற்றும் இயற்கையின் கால சூழ்நிலை காரணமாகவும் பல சுதைகள் தனது கதைகளை கட்டியம் கூறாமல் தனது வாழ்நாளை முடித்துக் கொண்டன என்பது வேதனைக்குரிய செய்தி. எஞ்சியுள்ள சுதைச் சிற்பங்களையாவது மீட்டுருவாக்கம் செய்து அவை சொல்லும் செய்திகளை கேட்க செவிமடுத்து ஆவணப்படுத்துவோம்.

கோயில்களும் நகரத்தார் அமைத்த சுதைகளும் 

 கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், விஜயநகரர், மராத்தியர், சேதுபதிகள்,  சிவகங்கை மன்னர்கள் என்று அரச மரபினர்கள் எண்ணற்ற கோயில்களை கட்டியும் புனரமைத்து வந்துள்ளனர் அவை இன்று கலைச் சின்னங்களாகவும்  பண்பாட்டு சின்னங்களாகவும் இருக்கின்றன. அவர்கள் காலத்துக்கு பின்னர் மன்னர் பின்னோர் மரபினர் என்று காப்பியங்கள் சொல்லும் நகரத்தார்கள் அப்பணியை ஏற்று  குமரி முதல் வேங்கடம் வரை என பாடல் பெற்ற பல திருத்தலங்களில் உள்ள பழம்பெரும் கோவில்களைப் புதுப்பித்தலும் அவ்வாறு புண்ணிய தலங்களில் பலவற்றை திருப்பணி செய்து பராமரித்தலும் இறைபணியை தம் குலப்ணியாக ஏற்றனர்.  நகரத்தார்கள் சீரிய பக்தியால் தமிழக கோவில்களை பலமுறை பழுது பார்க்கப்பட்டுள்ளன. எனவே தான் " கோவில் பழுதானால் கூப்பிடு செட்டியாரை" என்பது தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வழங்கப்படும் ஒர் பழமொழியாகும்.

 நகரத்தார்கள் பாண்டிய நாட்டில் குடியேறிய கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இருந்தே கோயில் திருப்பணிகள் ஈடுபட்டனர் என செவிவழிச் செய்தியாக கூறுகின்றனர் இதற்கு எந்தவித சான்றுகளும் தற்சமயம் இல்லை என்றாலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே கோவில்கள் திருப்பணி, ஊரணி அமைத்தல் போன்ற சமயப் பணிகளில் ஈடுபட்தற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளம் கிடைக்கின்றன எனினும் கி.பி 18 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளில் செய்ய நகரத்தார் செய்த திருப்பணி காலவாரியாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தார்கள்  ஊர்களில் ஒன்றாக அரியக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1818ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து முதல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இக்கோயிலே முதன் முதலில் நகரத்தார்கள் கற்றளியாக எடுத்ததாக சொல்லபடுகின்றது. இரண்டாவதாக 1820 ஆம் ஆண்டு உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 நகரத்தார் கோவில்களும் சிற்பங்களும் செட்டிநாட்டு  கம்மாளர்களால்  உருவாக்கப்பட்டவை இவர்கள் பிள்ளையார்பட்டி, அருணாசலபுரம், தேவகோட்டை, எழுவன்கோட்டை,  வைரவன்பட்டி போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நகரத்தார் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் வாஸ்து சாஸ்திரம், மயமதம், மானசாரம், சகளாதிகாரம், காசியப சிற்பசாஸ்திரம், சாரஸ்வதிய சித்திர தர்மசாஸ்திரம், பிராமிய சித்ர கர்ம சாஸ்திரம், ஸ்ரீ தத்துவநிதி ஆகிய சிற்ப நூல்களில் கூறுகின்ற இலக்கணப்படி காணப்படுகின்றன. நகரக்கோயில்கள் காமிகாகமம், காரணாகமம் ஆகிய ஆகம முறைப்படி கோயில்களில் சிற்பங்களை பெரும் சிற்பிகள் துணையோடு அமைக்கப்பட்டது. நகரத்தார்கள் நம்நாட்டில் கங்கைக் கரை வரை என பல பகுதிகளையும் வாணிபம் காரணமாக சுற்றிப்பார்த்து பல்வேறு கோயில்கள் அமைப்புகளையும் கூர்ந்து நோக்கியும் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால சிற்பங்களில் குறைகளை விடுத்து நிறைகளை ஏற்றுக் கொண்டு தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டனர் கோயில்களை அமைத்தனர்.
சோழர் காலத்துக்கு முன்பு வரை இறைவிக்கு என தனி சன்னதி இல்லை பொ.பி 11ஆம் நூற்றாண்டிலிருந்து இறைவிக்கு காமகோட்டம் அமைக்கும் வழக்கம் துவங்குகின்றது இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்கள்  இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இறைவன் கோயிலுக்கு இடப்புறம் இறைவி கோயில் அமையும் ஆனால் சிவன் சக்தி ஆகிய இருவரையும் ஒரே ஆலயத்தில் பக்கம் பக்கமாக வீற்றிருக்க செய்தவர்கள் நகரத்தார்கள் என சிற்பக்கலை வல்லுனர் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறே நகரத்தார்கள் அமைத்த கோயிலில் மேடை மீது கிழக்கு நோக்கிய சிவபெருமான் சன்னதியும் தெற்கு  நோக்கிய இறைவியின் சன்னதியும் அமைந்திருக்கும். இதே பாணியே  நகரத்தார்கள் வாழும் ஊர்களில் கட்டப்பட்ட நகர கோயில்களும் பின்பற்றி அமைத்துள்ளது.
 கோவில் அமைப்பில் பள்ளப்பத்தி முறை என்பது நகரத்தார்க்கே உரிய தனித்துவமான பாணியாகும். கருவறை தளத்தை உயரத்தி நிலைக் கோபுர உயரத்திற்கு சமமாக கருவறைப் விமானங்களையும் அமைத்தனர். இக்கோவில் அமைப்பு என்பது  கோவிலில் நுழையும் போது கொடிமரம், நந்தி, பலிபீடம், முகமண்டபம், பள்ளப்பிரகாரம், திருச்சுற்று மாளிகை, மாளிகைபத்தி,  பரிவார ஆலயங்கள், வாகன அறையி,  உற்சவர் அறை, கருவூலம், யாகசாலை, வியஞ்சன மண்டபம், மடைப்பள்ளி, மலர் மேடை, கோவில் கிணறு, அலங்கார மண்டபம், மேல் சுற்று பிரகாரத்தில் மகா மண்டபம், அம்மன் சன்னதி, வைரவர் சன்னதி, பள்ளியறை, நடராஜர் சபை, அர்த்த மண்டபம், கருவறை என நகரத்தார் கோவில் அமைப்பு இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும். இறைவனுக்கு  முன்பாக அர்த்த மண்டபத்தில் ஐம்பொன்னால் செய்த கண்ணாடி படிமமும் நந்தியும் அமைக்கும் வழக்கம் நகரத்தார்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டுதே இறைவனுக்கு செய்யும் சோடச உபசாரங்கள் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி சக்தியாகவும்  அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் இதனை ஆராதிப்பவர்களும் தரிசிப்பவர்களுக்கும் ஞானத்தை அடைவார்கள் என சொல்லப்படுகின்றது.
கோயிலில் காணப்படும் தூண் வகைகளை வைத்தே இது எந்த பாணியில் கட்டப்பட்ட கோயில் என்று கூறலாம் கல்தூண்கள்  கால், பாதம், கலசம், தாடி, குடம், பத்மம், பலகை, போதிகை என எட்டு பகுதிகளை கொண்டது. தூணை உத்திரத்துடன் இணைக்கும் பகுதியில் போதிகை எனப்படும். நகரத்தார்களின் கட்டிடபாணியில் பொதிகையில் கீழ் ஒரு சிங்கத்தின் சிற்பம் கூடுதலாகக் காட்டப்படும். சித்திரக்கால், அணியொட்டிகால்,  கர்ணக்கால் என்று மூன்று வகையான தூண்களை நகரத்தார் புனரமைத்த கோயில்களில் காணலாம். மேலும் போதிகையில் உள்ள பூமுனை ஒரே கல்லில் செதுக்காமல் தனியாக செய்து காடி கொடுத்து கையால் திருகி பொருத்துமாறு அமைந்துள்ளமை நகரத்தார்களின் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இவ்வாறே நகரத்தார்கள் புனர்நிர்மாண செய்த கோயில்களில் இவற்றுள் ஏதேனும் ஒரு அமைப்பை நம்மால் காணமுடியும்.

கோயில்களும் நகரத்தார்கள் செய்த சுதை வேலைப்பாடுகள்

நகரத்தார் வீடுகளைப் போல கோயில் திருப்பணியின் போது  இங்கும் அமைக்கப்பட்ட சுதை வேலைப்பாடுகள் கால வாரியாக நம்மால் பிரித்து காணமுடியும். கோவில் சுதை தொகுப்பில்  நகரத்தார்களின் தனித்துவம் என்று குறிப்பிட வேண்டுமென்றால் ஆலய விமானங்கள், கோபுரம் போன்றவற்றில் காணப்படும் பாரஹாரர்களுக்கு ( சுமைதாங்கிகள் )  தலைப்பாகைகள், முண்டாசுகட்டு, சட்டை, பதக்கங்கள், ஐரோப்பியகாவலர்கள் போன்ற தோற்றத்திலும் குறவன் குறத்தி வேடுவர்கள் போன்ற உருவில் சுமைதாங்கிகள் காட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது. அத்தோடு அவர்களுக்கு அருகில் பறவைகளை காட்டும் வழக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கோபுரத்தின் கர்ணக்கூடு பகுதிகளில் கந்தர்வர்கள், குழந்தைகள், அரசன், அரசி முகங்கள் காட்டுதல், ஆலயத்தின் மதில்சுவற்றில் நாக்கு பகுதியின் மையத்தில் பெரும்பாலும் ரவிவர்மா பாணியில் வள்ளி தெய்வானையுடனான சண்முகர், சயனகோலத்தில் திருமால் , வாசுதேவர், ஆலமர்செல்வன், இராமர் பட்டாபிஷேகம் போன்றவையும் காட்சிகள் பெரும்பாலும் காணமுடியுகின்றது.
ராஜகோபுரங்களில் இரட்டை குதிரை வீரன், பிரிட்டிஷ் சிப்பாய்கள், சேடிப்பெண்கள், பிரிட்டிஷ் உடையுடுத்திய மக்கள், பாரதமாதா, சுதந்திர போராட்ட தியாகிகள், போன்ற உருவங்களை நம்மால் காணமுடியும் அத்தோடு  குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் இறைவனும் இறைவியும் ரிஷபத்தில் இருப்பவர்களாக காட்டப்படும். செட்டிநாட்டில் மட்டும் சுதைகளில் அம்மாள் ரிஷபம் மாற்றும் ரிஷபமாக காட்டும் வழக்கம் இருக்கின்றது. ரவிவர்மா சமைத்த இறையுருவங்களை முப்பரிமாணத்தில் மிக நேர்த்தியாக காண வேண்டுமாயின் அவற்றை செட்டிநாட்டு பகுதியில் உள்ள வீடுகளிலும் கோவில் கோபுரங்களில் நம்மால் இன்றுவரை காணமுடியுகின்றது அவ்வாறு மிக நேர்த்தியாக வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரங்கள் செட்டிநாட்டு பகுதிகளில் பல இடங்களில் காணமுடியும். எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அரியக்குடி பெருமாள் கோவில் ராஜகோபுரம், ஆத்தங்குடி, பட்டமங்கலம், குருவிக்கொண்டான்பட்டி சிவன் கோயில்கள் ராஜகோபுரம் மிக சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்தவை. மிதிலைப்பட்டி சிவன்கோலில் ராஜகோபுரத்தில் மிக அழகாகவும் நேர்த்தியாக ரவிவர்மா பாணியின்  அமைந்த சுதைகள் நிறைந்து காணப்படுகிறது. நகரத்தார்கள் திருப்பணி செய்த பல கோவில்களிலும் செட்டிநாட்டு கலைப்பாணி சுதைகள் நம்மால் இன்றுவரை காணமுடிகிறது. திருவையாறு ஐய்யாரப்பர் கோவில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலிசுவதிருக்கோயில், திருவிற்குடி வீரட்டானேசுவரர் திருக்கோயில் போன்றவை மிகச்சிறந்த சான்றுகளாகும். 
செட்டிநாட்டில் நகரக்கோவிலின் முகப்பு பகுதிகளில் பெரும்பாலும் இரட்டை யானையும் பாகனும் காட்டுவர், அதோடு  அம்மன் சன்னதி நுழைவாயிலில் லலிதா தர்பார் காட்சியும் இறைவனின் சன்னதி வாயிலில் மீனாட்சி திருமணம் அல்லது இடபாருடர் காட்டும் வழக்கம் உள்ளது. அத்தோடு கோவிலின் நான்கு மூலைகளிலும் உள்ள பூதகணங்கள் மற்றும் காளையின் உருங்கள் மிகவும் உயிரோட்டமாகவே செட்டிநாட்டின் கம்மாளர்கள் வடிவமைத்துள்ளார். 
இதுபோல் கருப்பர் கோவில்களிலும்  சுதையால் செய்யப்பட்ட பெரியளவிலான குதிரைகள், யானைகள், பூதகணங்கள் மிகவும் உயிரோட்டமாகவும் காட்சியளிக்கும் இவற்றுள் எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் கத்தப்பட்டு தொட்டியத்து கருப்பர் ஆலயத்தில் உள்ள உயரமான குதிரைகள், காரைக்குடி பொய்சொல்லா மெய்யர் ஆலய புரவிகளும் பூதகணங்களும், இராங்கியம் கருப்பர் கோவிலின் முகப்பில் உள்ள ஆக்ரோஷமான அனுமன் மற்றும் குதிரையை தாங்கி நிற்கும் பூதகணங்கள்  மிகச்சிறந்த சான்றுகள். இப்படி 20 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியில்  நகரத்தார்களின் திருப்பணியில் செய்யப்பட்ட சுதை வேலைப்பாடுகள் மிக நேர்த்தியாகவை  இவை இன்றும்வரை  செட்டிநாட்டு கம்மாளர்களின் திறமைக்கு கட்டியம் கூறுபவையாகவே இருக்கின்றது.

இன்று நாம் பலரும் திருத்தலங்களுக்கு  செல்வதனை கடமையாக கொண்டுள்ளோம் அப்படி செல்லும்போது பலரும் இறைவனைக் கண்டால் போதும் என்ற மனநிலையில் நேராக மூலவரையும் பரிவார தெய்வங்களையும் தரிசித்து அவசரகதியில் ஆலய ஆலயத்தை விட்டு வெளியேறி தத்தம் வேலைகளுக்கு சென்று விடுகின்றோம். ஆனால் ஆலயங்கள் என்பவை அன்று முதல் இன்று வரை மக்களின் வாழ்வியலின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகின்றது. 
நாம் கடந்து வந்த சமுகவாழ்வியலின் பரிமாணத்தையே  ஆலயத்தில் உள்ள உலோகதிருமேணிகள், சிற்பங்கள், வாகனங்கள், சுதைகள் போன்றவை பார்க்கும் போது நமக்கு புரியவரும். ஆலயத்தில் உள்ள சுதைகளும், சிற்பங்களும் அத்தலப்பெருமை, புராணம், அச்சூழலியல், மக்களின் வாழ்வியல் போன்றவற்றை நமக்கு எடுத்துச் சொல்லும் அத்தோடு இவை நம் கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு அமைதியையும் தரும். இக்காலகட்டத்திலும் செய்யப்படும் சுதை வேலைப்பாடு என்பது நகரத்தார்களின் பாணியிலேயே அமைகின்றன சுதைகளின் உட்புறத் கூடுகளை உட்புறத்தில் கம்பிகளை கொடுத்தே இன்றளவும் சுதைகள் செய்யப்படுகின்றன ஆனால் மூலப் பொருளாக  சிமெண்ட்டை தற்காலத்தில் பயன்படுத்துகின்றனர். முதலாம்  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதைகளில் ஏற்பட்ட ரவிவர்மாவின் தாக்கம்  என்பது இன்றளவும் சுதைகளில் மேற்கத்திய பாணியின் சாய்லோடு கோலோச்சிக் கொண்டுடிருகின்றது.

வேணும் மலையாளத் தொட்டியத்துக் கருப்பர் துணை
--தெக்கூர்.இராம.நா.இராமு இராமநாதன்

No comments: