Friday 31 March 2017

தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :



தேனம்மை ஆச்சியின் சும்மா என்ற வலைப்பூவுக்கு எழுதிய ஒரு கிறுக்கல்:

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில்  தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர். அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும் வந்தனர்.



     1850களில் நீர்விழ்ச்சி பகுதிகளில் வழிபட மக்கள் கூட்டம் அதிகரிப்பாலும் நீர்விழ்ச்சியின் இயற்கை சூழல் மாசுபடுவதை கண்ட பிரித்தானிய அரசு அருவிபகுதிக்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தாவரவியல் பூங்காவாக மாற்றியது. ஆங்கிலேய அரசு நீர்விழ்ச்சியில் அமைத்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல தடை வித்தித்ததன் எதிரொலியாக நகரத்தார்கள் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு ஜீயார் டவுன் வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில்      ( கிட்டங்கியில் ) தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 1854ல் ஐந்து ஏக்கர் பரப்பளவு நிலம் ஒன்றை வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலையானுக்கு ஆகம விதிப்படி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்து மகிழ்ந்தனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலின் அமைப்பு என்பது  , செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் செட்டிநாட்டு  பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் (பெருந்தச்சர்கள்) கொண்டு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆலயமாகும் . இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல கூட்டல் குறி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போலதண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். இந்த திருமேனியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அத்தனை கலையழகு கொண்ட திருமேனியாகும். இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம்தென்னந்தோப்பு என்று மிகவும் அழகுற திகழ்கிறது தண்ணீர்மலையான் ஆலயம்.

 

இக்கோவிலில் மிகவும் சிறப்புவாய்ந்தவர் தண்ணீர்மலையானேயாவார் . அதற்கு காரணம் தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது.
மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாகக் கருதுவர். நின்ற திருக்கோலத்தில் உள்ள திருமுருகப் பெருமானின் இத்திருவுருவம்
காண்பார் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாக அமைந்துள்ளது. இம்மலேசிய மண்ணின் பினாங்கு தீவில்  முருகப்
பெருமான் தண்ணீர்மலையிலே  தண்ணீர்மலையான் தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அனைவருக்கும்
அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென்கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து தருவிக்கப்பெற்ற தேக்கு மரத்தில் தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் மிகவும் நேர்த்தியாக மிளிர்கிறது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள், அடுத்த கீழ் வரிசையில் கீழ் உலகப்புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் இரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும்வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் அழகை காண ஒருநாள் போதாது.

 

நகரத்தார்கள் முருகப்பெருமானை என் துறவுக் கோலத்தில் அமைத்து வழிபட்டார்கள் என்பதற்கு நல்ல கருத்துக்களும் நம்மிடையே உண்டு.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஔவையின் முதுமொழிக்கு ஏற்ப நம் நகரத்தார்கள் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்பொழுது தங்கள் குடும்பத்தினை விட்டு தனியாகவே சென்று வரும் வழக்கமிருந்ததாலும், தொழில்துறை நடத்தி வாழும் பொழுது மனம் சலனமடையாமல் இருப்பதற்காகவும் தங்களைப்போல தாய் தந்தையாரை விட்டு தனியாக வந்து பழனி மலையில் தனிக்கோயில் கொண்டுள்ள தவக்கோலத் தண்டாயுதபாணியை தங்கள் எண்ணத்தில் வைத்து, ஆலயம் கட்டி வழிபட்டு] வந்தனர். அவனது அருளையே துணையாகக் கருதும் தாங்கள் அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு எழுதும் கடிதங்களில், கடைசியாகத் தங்கள் கையெழுத்தைப் போடாமல்,
ஸ்ரீ தண்டாயுதபாணி துணை என்றே பல நகரத்தார்கள் முடிப்பார்கள். இன்றும் இப்பழக்கம் நகரத்தார்கள் எழுதும் கடிதங்களில் கையாளப்படுகிறது என்பதும் சிறப்புக்குறிய ஒன்றாகும் .

 

தைப்பூசம் சிவபெருமானுக்கு உரிய விழாவாக இருப்பினும் குன்று தோறாடும் குமரனுக்கு உரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருவிழா என்றால் நிச்சயம் காவடிகள் இடம்பெறும். காவடிகள் என்றால் கண்ணைக்கவரும் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் திருவிழாவில் காணிக்கையாக எடுக்கப்படுகின்றன.

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் இலட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்து கொள்வது சிறப்பாகும். இனமத வேறுபாடு இன்றி இங்கே ஒன்று கூடுகிறார்கள். தைப்பூச நாளைப்
பொது விடுமுறையாக மலேயா அரசு அறிவித்து தமிழர்களை கவுரவித்துள்ளது .

தனவணிகர்,வேள்வணிகர் என்ற சிறப்புப் பெயர் படைத்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தாம் கொண்டாடி கும்பிட்டு மகிழும் தண்டாயுதபாணிக்கு பினாங்கில் சிறப்பான விழாவாக தைப்பூசத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.


 

பினாங்கில் தண்ணீர்மலையில் நடைபெறும் மூன்று நாள் தைப்பூசத் திருநாள்விழா புகழ் மிக்கதும்,வெளிநாட்டவர்கள் அதிகம் பங்குபெரும் தனிச்சிறப்பு வாய்ந்த விழாவாகும். காரணம் நூறாண்டுகள் பழமைவாய்ந்த வெள்ளி இரதத்தில் தண்ணீர்மலையான் நகர் வலமாய் வந்து,பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் நின்று, பக்தர்களின் காணிக்கை ஏற்று, அருள்பாலித்து, இலட்சக்கணக்கான சிதறு தேங்காய்கள் உடைபெற்று அதன் இளநீர்கழுவிய தெருப்பாதைகளின் வழியே சென்று தண்ணீர்மலை கோவிலை அடையும் காட்சி, மலையகத்தில் தனிச்சிறப்புமிக்க, பெருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் பினாங்கு தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம்வரும் திருக்காட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் .நூற்றாண்டுகளுக்கு  மேலாக (123 ஆண்டுகள்) பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமையும் புகழும் வாய்ந்ததாகும்.
கடந்த 1894ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, நான்கு சக்கரங்களும், மூக்கணைப் பகுதிகள் 1994வாக்கில்  புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இந்த வெள்ளி இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடியாகும். சக்கரம்தவிர இரதத்தின் முழுப் பகுதியும் கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) உருவாக்கப்பட்டதாகும். நூறாண்டுகளுக்கு மேலாக எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. இது இந்த இரத்தின் உறுதித்தன்மையையும் தமிழ் பேருந்தச்சர்களின் வேலைப்பாடுகளின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டிதிருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது.

இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை
திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். திருக்கல்யாண விழாவுடன் கூடிய இந்த ஏழு நாட்களில் அவர் வழங்கும் அருள்காட்சிகள் நம் மனதை விட்டு அகலாத தெய்வீகத் திருக்காட்சிகளாகும். நல்விழா கந்தர் சஷ்டித் திருநாளாகும்.
மேலும் தண்ணீர்மலையானுக்கு தமிழ் வருடபிறப்பு, தமிழ்மாதப்பிறப்பு, திருக்கார்த்திகைபெருவிழா , கார்த்திகை சோமவாரம் போன்ற மாதக்கார்த்திகை போன்ற நாட்க்களில் சிறப்பு பூசைகள் தண்ணீர்மலையானுக்கு செய்யப்படுகின்றனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு  காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும்,இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக தொய்வின்றி சிறப்பாக நடைபெறுகின்றன.
வேணும்
"
அருள்மிகு தண்ணீர்மலை தண்டாயுதபாணியே துணை"
------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன்

Friday 24 March 2017

கோனே பால்ஸ் என்ற கைலாச கோனே



  சென்ற வார இறுதி பயணத்தில் கண்டவற்றின் தொகுப்பு. கோனே நீர்வீழ்ச்சி தமிழக எல்லையில் புத்தூர்க்கு அருகில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத் தலம். சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. குடும்பத்துடனும் நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலா பயணமாக வந்து பொழுதுதை போக்க மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இந்த இடம் திகழ்கிறது. அது மட்டும் இல்லாது இது சுற்றுலாத் தலமாக பலருக்கு திகழ்ந்தாலும் இது ஒரு ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டிக் கொண்டே இருக்கும் என்பது இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சமாகும் .

கைலாச கோனே அருவி

கைலாச கோனே அருவிக்கு செல்லும் வழி 

இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இயற்கையாகவே வனப்பகுதியில் இருந்து 100 முதல் 120 அடி உயரத்தில் இருந்து அழகாக விழுகிறது. மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் நீர்வீழ்ச்சியில் விழும் நீர் தூரத்தில் இருந்து பார்க்க சிறிதாக இருந்தாலும் சற்று அருகில் சென்று பார்த்தால் நீர்வீழ்ச்சி புத்துணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பாதுகாப்பான வகையில் உள்ளது .

அருவிக்கு செல்லும் வழியில் உள்ள புத்துக் கோவில்


கைலாச கோனே அருவியும் குகைக்கோவிலும்


கோனே அருவியின் மறுபக்கம் ::

 கோனே நீர்வீழ்ச்சி பலருக்கு சுற்றுலாத் தலமாகத்தான் தெரியும் இதற்கு மற்றொரு முகம் உண்டு.இது பலருக்கு தெரியாத ஒன்றாகும். திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு பத்மாவதிக்குமான திருமணம் புத்தூருக்கு அருகில் நாராயணவனம் என்னும் இடத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது . இந்த திருமணத்தை சிவபெருமானே தலைமையெற்று நடத்தியதாக நம்பப்படுகிறது. அப்படி நாராயண வனத்தில் திருமணம் நடத்திவைக்க வந்த சிவபெருமான் கையிலாயத்துக்கு நிகராக ஒரு இடத்தை தான் தங்கி தேடியபோது ஈசன் இந்த இடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கியதாக நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை இந்த பகுதி மக்கள் கைலாச கோனே நீர்வீழ்ச்சி என்றே பரவலாக அழைக்கப்படுகின்றது . இந்த இடம் கைலாயத்துக்கு ஒப்பான ஒரு இடமாகவே இங்கு உள்ள மக்கள் நம்புகின்றனர்.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் ஜிவசமாதிக்கு செல்லும் வழி எங்கள் பயணத்தில் மேலே செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது
 கையிலாச கோனே அருவிப் பகுதியில் ஒரு சித்தரின் ஜீவசமாதி ஒன்றும் அமைந்துள்ளது . இந்த ஜீவசமாதி பகுதியில் ஒவ்வொரு முழு நிலவு நாளில் வால் நட்சத்திரமாக சித்தர் காட்சி  தருவதாகவும் நம்பப்படுகிறது . இதை காண பக்தர்கள் பலரும் கூடி இரவு கூட்டு வழிபாடு செய்கின்றனர் . முழுநிலவு நாளில் இங்கு வந்து சென்றால் எண்ணங்கள் ஈடேருவதாவும் நம்பப்படுகிறது.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை
 காஞ்சிபுரத்தை சேர்ந்த விசுவநாத சுவாமிகள் என்பவர் காஞ்சி காமாட்சியின் அருளால் இந்த இடத்திற்கு வந்து தவவாழ்வை மேற்கொண்டு ஜீவ சமாதியாகியுள்ளார். விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை ஒன்றும் இங்கு அருவிக்கு அருகில் உள்ளது இந்த இடத்தை ஒரு நாகம் காவல் புரிவதாகவும் நம்பப்படுகிறது. குகைக்கு மேல் புரத்தில் தான் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோனே அருவியின் நீர் மருத்துவ குணம் கொண்டதாகவும் தாது சத்து நிறைந்த ஒரு புனித நீராகவும் இந்தபகுதி மக்களால் நம்பப்படுகிறது. சில நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாகவும் நம்ம்பிகை உள்ளது. காஞ்சி மகாபெரியவா இந்த இடத்தில் பலமுறை வந்து தவம் செய்தார் என்றும் சொல்லுகின்றனர்.

அறிவிப்பு பலகை
     இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக மிக அருகிலேயே சிவபெருமான் பார்வதி தேவி உடனும் மற்றும் பரிவார தேவதைகள் சிலா ரூபங்கள் அருவிக்கு அருகில் உள்ள குகையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தெய்வங்களுக்கு இரண்டு கால பூசை சிறப்பாக நிகழ்கிறது.

அருவிக்கு அருகில் உள்ள இறை உருவங்கள்
அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ளசிவன் மற்றும் பார்வதி
கையிலாச கோனே அருவிப் பகுதியில் மது மாசிமகம் மற்றும் போதை வஸ்து பொருட்களை வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறையினர் அருவிப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். கோனே அருவிப் பகுதியில் அடிவாரத்தில் உள்ளூர் மக்களின் கடைகள் நிறைய அமைத்து உள்ளனர் இங்கு ஆயில் மசாசுகளும் செய்கின்றனர் மேலும் சுற்றுலாப்பயணிகள் தேவைக்கு இனங்க நாட்டுக் கோழி சமைத்து தருகின்றனர் .

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள அம்மன்

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள
அருவிக்கு செல்வதற்கு முன் ஆர்டர் செய்துவிட்டு முன்பணம் செலுத்திவிட்டு சென்றால் சிறந்த முறையில் சமைத்து தருகின்றனர் உள்ளூர் வாசிகள்.


அருவிக்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருவியில் நீராட சுற்றுலாத் துறையினர் அனுமதிக்கின்றனர். கையிலாச கோனே நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. புத்தூரில் இருந்து 10 கிமீக்கு உள்ளது. கையிலாச கோனே நீர்வீழ்ச்சி

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்..

Wednesday 22 March 2017

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில்

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில் தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு எழுந்தருளி இருக்கும்      
  


ஆலய விமானம்

ஸ்ரீ தேவி பூதேவி சமயத வேத நாராயண சுவாமி சுதை சிற்பம்

  எம்பெருமானின் திருப்பெயர் :: வேத நாராயணப் பெருமாள்
 தாயார் திருப்பெயர் :: வேதவல்லித்தாயர் 

 ஆலய அமைப்பு :: 

இந்த திருகோவில் விஜய நகர மன்னர் கிருஷ் தேவராயரால் நிறுவப்பட்ட ஆலயமாக சொல்லப்படுகிறது. திருகோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகிறது .தெலுங்கு கல்வெட்டுகளும் அங்காங்கே காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயன் தன் தாயார் நினைவாக இந்த கோவிலையும் ஊரையும் உருவாக்கி தனது தாயாரின் பெயரான நாகலா தேவி எனபதனையே நாகலாபுரம் என்று சூட்டினார் . இக்கோயிலின் சிறப்பு வேத நாராயணப் பெருமாள் மேற்கு திருக்காட்சி நல்குகின்றார். வேதவல்லி தாயார் கிழக்கு நோக்கி அருளுகிறார். திருக்கோயில் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி தருகிறது. அதனையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜ கோபுரத்தை கடந்தால் ஆலயத்தின் கொடிமரம் , பலிபீடம் , கருடாழ்வார் மேற்கு நோக்கி அருளுகிறார்கள் .அதனை தொடர்ந்து மூன்றாவது ராஜ கோபுரத்தை கடந்தால் ஷேத்தரபாலகர் மற்றும் தும்பிக்கையாழ்வார் அர்த்த மண்டப முகப்பில் அருளுகிறார்கள் மற்றும் உள்ளே பணித்தால் ஜெயன் விஜயன் காட்சி தருகிறார்கள். இவர்களை கடந்தால் உள்ளே கருவறையில் சங்கு சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் மச்சவடியில் வேத நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக காட்சிதருகிறார் . மேலும் ஆலயத்தின் இரண்டாம் பிறகாரத்தில் பிரம்மோற்சவ வாகனங்கள் வருசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தென்கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி தருகிறார். மற்றும் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருளாட்சி நல்குகின்றார். மேலும் இங்கு லக்‌ஷ்மி நரசிம்மர் , வீர ஆஞ்சநேயர் , பக்தஆஞ்சநேயர் , இராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதி கொண்டு அருளுகின்றனர். 

 
அறநிலையத்துறை அறிவுப்பு பலகை 



ஆலய தோற்றம்

ஆடல் மகளிர் கிழக்கு ராஜகோபுர வாயிலில்

சிற்ப வேலைப்பாடு ஆலய வாயில் படியின் முகப்பில் 

ஆலயத்தின் தோற்றம் 



ஆலயத்தின் கோபுரத்தின் திருமகள் புடைப்பு சிறப்பும் தமிழக அறநிலையத்துறைக்கு நிகராகவே பராமரிப்பு வேலையை செய்கின்றன 
 
சிதைந்தைத நிலையில் விமானத்தின் மேல் தளத்தில் உள்ள நவகரக சக்கரம் 

தல வரலாறு:: 

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.



 நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. 

பலிபீடம் கொடிமரம் மற்றும் கருடாழ்வார் 

பெருமாள் சன்னதிக்கு

திருச்சுற்று

ஆலயப் பெருவிழா ::

 1. இத்திருக்கோயில் பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நிகழ்கிறது .
 2. பங்குனி மாதம் வளர்பிறையில் ( சுக்லபட்சம் ) மூன்று நாட்கள் துவாதசி திரயோதசி சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார் .அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை வழிபடுகின்றனர் .மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் வழிபடுவது சிறப்பு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் இரவு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 

யானைகளின் சிற்பம் ஆலயத்தின் வடகிழக்கு பகுதி திருச்சுற்றில்

ஆலயத்தின் தென்பகுதி திருச்சுற்று

 3.மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா 
 4. தைமாதப் பிறப்பு ( மகர சங்கராந்தி ) மற்றும் ரதசப்தமி
 5.தெலுங்கு வருடப்பிறப்பு .

வேதவல்லி தாயார் சன்னதி

தெற்கு ராஜகோபுரம் அடைக்கப்பட்ட நிலையில்

 பூசை நேரம் :: 

இத்திருக்கோயில் நித்திய பூசையானது ஆறு காலமும் தொய்வின்றி சிறப்பாக நிகழ்கிறது. காலையில் 6.00 முதல் மதியம் 1.00 வரையும் மாலை 4.00 முதல் இரவு 8.00 திறந்திருக்கும். வேத நாராயண பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 8.00மணியளவில் சிறப்பாக திருமஞ்சனம் நிகழ்கிறது. மற்றும் வேதவல்லி தாயாருக்கு வெள்ளி கிழமை காலை 8.00 மணிக்கு நிகழ்கிறது. இத்திருக்கோயில் திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடில் செயல்படுகிறது. தற்போது ஆலயத்தின் பராமரிப்பு பணி நிகழ்ந்து வருகிறது . 

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்

Thursday 16 March 2017

குருவும் சீடனும்




ஒரு ஊரில் ஒரு சீடன்  தன்  குருவிடம் தனது நெடுநாள் சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முற்பட்டான்  அவன் தன் குருவிடம் பகுத்தறிவுக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்என்ன என்று கேட்டான். 


 அதற்கு குரு சீடனைபாத்து உனது வலதுகாலை  மட்டும் ஊனாது நில் என்றார் அதன் படி அவனும் நின்றான். அடுத்து  சில நொடியில் குரு சீடனிடம்வலதுகாலை கீழே ஊனாது இடதுகாலையும் தூக்கு என்றார் அவனும் சற்றும் சிந்திக்காது தூக்க முற்பட்டான். அதன் விளைவாக கீழே விழுந்தான்.

அதன் பின் குரு சீடனிடன் பகுத்தறிவு என்பது ஊன்னால் ஒருகாலை தூக்க முடிந்தது அதுதான் பகுத்தறிவு. இரண்டு காலையும் ஒரு சேர தூக்கினால் அடிபடும் அது தான் விதி இப்போது புரிகிறதா என்று சீடனின்  சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்தார். சீடனோ விதியை நினைத்து நொந்து கொண்டு இடுப்பை பிடித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.