Friday 31 March 2017

தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :



தேனம்மை ஆச்சியின் சும்மா என்ற வலைப்பூவுக்கு எழுதிய ஒரு கிறுக்கல்:

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில்  தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர். அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும் வந்தனர்.



     1850களில் நீர்விழ்ச்சி பகுதிகளில் வழிபட மக்கள் கூட்டம் அதிகரிப்பாலும் நீர்விழ்ச்சியின் இயற்கை சூழல் மாசுபடுவதை கண்ட பிரித்தானிய அரசு அருவிபகுதிக்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தாவரவியல் பூங்காவாக மாற்றியது. ஆங்கிலேய அரசு நீர்விழ்ச்சியில் அமைத்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல தடை வித்தித்ததன் எதிரொலியாக நகரத்தார்கள் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு ஜீயார் டவுன் வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில்      ( கிட்டங்கியில் ) தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 1854ல் ஐந்து ஏக்கர் பரப்பளவு நிலம் ஒன்றை வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலையானுக்கு ஆகம விதிப்படி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்து மகிழ்ந்தனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலின் அமைப்பு என்பது  , செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் செட்டிநாட்டு  பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் (பெருந்தச்சர்கள்) கொண்டு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆலயமாகும் . இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல கூட்டல் குறி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போலதண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். இந்த திருமேனியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அத்தனை கலையழகு கொண்ட திருமேனியாகும். இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம்தென்னந்தோப்பு என்று மிகவும் அழகுற திகழ்கிறது தண்ணீர்மலையான் ஆலயம்.

 

இக்கோவிலில் மிகவும் சிறப்புவாய்ந்தவர் தண்ணீர்மலையானேயாவார் . அதற்கு காரணம் தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது.
மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாகக் கருதுவர். நின்ற திருக்கோலத்தில் உள்ள திருமுருகப் பெருமானின் இத்திருவுருவம்
காண்பார் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாக அமைந்துள்ளது. இம்மலேசிய மண்ணின் பினாங்கு தீவில்  முருகப்
பெருமான் தண்ணீர்மலையிலே  தண்ணீர்மலையான் தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அனைவருக்கும்
அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென்கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து தருவிக்கப்பெற்ற தேக்கு மரத்தில் தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் மிகவும் நேர்த்தியாக மிளிர்கிறது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள், அடுத்த கீழ் வரிசையில் கீழ் உலகப்புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் இரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும்வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் அழகை காண ஒருநாள் போதாது.

 

நகரத்தார்கள் முருகப்பெருமானை என் துறவுக் கோலத்தில் அமைத்து வழிபட்டார்கள் என்பதற்கு நல்ல கருத்துக்களும் நம்மிடையே உண்டு.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஔவையின் முதுமொழிக்கு ஏற்ப நம் நகரத்தார்கள் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்பொழுது தங்கள் குடும்பத்தினை விட்டு தனியாகவே சென்று வரும் வழக்கமிருந்ததாலும், தொழில்துறை நடத்தி வாழும் பொழுது மனம் சலனமடையாமல் இருப்பதற்காகவும் தங்களைப்போல தாய் தந்தையாரை விட்டு தனியாக வந்து பழனி மலையில் தனிக்கோயில் கொண்டுள்ள தவக்கோலத் தண்டாயுதபாணியை தங்கள் எண்ணத்தில் வைத்து, ஆலயம் கட்டி வழிபட்டு] வந்தனர். அவனது அருளையே துணையாகக் கருதும் தாங்கள் அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு எழுதும் கடிதங்களில், கடைசியாகத் தங்கள் கையெழுத்தைப் போடாமல்,
ஸ்ரீ தண்டாயுதபாணி துணை என்றே பல நகரத்தார்கள் முடிப்பார்கள். இன்றும் இப்பழக்கம் நகரத்தார்கள் எழுதும் கடிதங்களில் கையாளப்படுகிறது என்பதும் சிறப்புக்குறிய ஒன்றாகும் .

 

தைப்பூசம் சிவபெருமானுக்கு உரிய விழாவாக இருப்பினும் குன்று தோறாடும் குமரனுக்கு உரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருவிழா என்றால் நிச்சயம் காவடிகள் இடம்பெறும். காவடிகள் என்றால் கண்ணைக்கவரும் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் திருவிழாவில் காணிக்கையாக எடுக்கப்படுகின்றன.

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் இலட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்து கொள்வது சிறப்பாகும். இனமத வேறுபாடு இன்றி இங்கே ஒன்று கூடுகிறார்கள். தைப்பூச நாளைப்
பொது விடுமுறையாக மலேயா அரசு அறிவித்து தமிழர்களை கவுரவித்துள்ளது .

தனவணிகர்,வேள்வணிகர் என்ற சிறப்புப் பெயர் படைத்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தாம் கொண்டாடி கும்பிட்டு மகிழும் தண்டாயுதபாணிக்கு பினாங்கில் சிறப்பான விழாவாக தைப்பூசத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.


 

பினாங்கில் தண்ணீர்மலையில் நடைபெறும் மூன்று நாள் தைப்பூசத் திருநாள்விழா புகழ் மிக்கதும்,வெளிநாட்டவர்கள் அதிகம் பங்குபெரும் தனிச்சிறப்பு வாய்ந்த விழாவாகும். காரணம் நூறாண்டுகள் பழமைவாய்ந்த வெள்ளி இரதத்தில் தண்ணீர்மலையான் நகர் வலமாய் வந்து,பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் நின்று, பக்தர்களின் காணிக்கை ஏற்று, அருள்பாலித்து, இலட்சக்கணக்கான சிதறு தேங்காய்கள் உடைபெற்று அதன் இளநீர்கழுவிய தெருப்பாதைகளின் வழியே சென்று தண்ணீர்மலை கோவிலை அடையும் காட்சி, மலையகத்தில் தனிச்சிறப்புமிக்க, பெருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் பினாங்கு தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம்வரும் திருக்காட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் .நூற்றாண்டுகளுக்கு  மேலாக (123 ஆண்டுகள்) பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமையும் புகழும் வாய்ந்ததாகும்.
கடந்த 1894ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, நான்கு சக்கரங்களும், மூக்கணைப் பகுதிகள் 1994வாக்கில்  புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இந்த வெள்ளி இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடியாகும். சக்கரம்தவிர இரதத்தின் முழுப் பகுதியும் கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) உருவாக்கப்பட்டதாகும். நூறாண்டுகளுக்கு மேலாக எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. இது இந்த இரத்தின் உறுதித்தன்மையையும் தமிழ் பேருந்தச்சர்களின் வேலைப்பாடுகளின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டிதிருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது.

இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை
திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். திருக்கல்யாண விழாவுடன் கூடிய இந்த ஏழு நாட்களில் அவர் வழங்கும் அருள்காட்சிகள் நம் மனதை விட்டு அகலாத தெய்வீகத் திருக்காட்சிகளாகும். நல்விழா கந்தர் சஷ்டித் திருநாளாகும்.
மேலும் தண்ணீர்மலையானுக்கு தமிழ் வருடபிறப்பு, தமிழ்மாதப்பிறப்பு, திருக்கார்த்திகைபெருவிழா , கார்த்திகை சோமவாரம் போன்ற மாதக்கார்த்திகை போன்ற நாட்க்களில் சிறப்பு பூசைகள் தண்ணீர்மலையானுக்கு செய்யப்படுகின்றனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு  காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும்,இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக தொய்வின்றி சிறப்பாக நடைபெறுகின்றன.
வேணும்
"
அருள்மிகு தண்ணீர்மலை தண்டாயுதபாணியே துணை"
------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன்

No comments: