Friday 3 April 2020

கடகம் அன்றும் இன்றும்



கடகம் / கடகப்பெட்டி /காடாப்பெட்டி
என்பது, பனையோலையால் செய்யப்படும் அளவில் பெரிய ஒரு வகைப் பெட்டி. இது தானியங்கள், பல வகையான பொருட்களை சேகரிக்கவும் நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் பயன்படுத்துவர். குறிப்பாக, பயறுவகைகள், வெல்லம், புளி, மிளகாய், கறிக்காய்கள் போன்ற பொருட்களை இட்டு வைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தென்மாவட்டங்களிலும் யாழ்பாணத்திலும்  பயன்படுத்தப்படுகின்றன பனையோலையால் செய்யப்ப ஒருவித காதற்ற கூடை .


படம்1 : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள நாயக்கர் கால தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும்  மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கையில் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு சந்தைக்க நடந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையில் அவள் கையில் பனை ஓலையில் முடையப்பட்ட கடகம் வைத்துள்ளாள். அதில் பனைஓலையின் வடிவம் மிக நுணுக்கமாகவும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.


படம் 2: புதுச்சேரி ஆரோவில்லில் வசிக்கும் ராஜ்குமார் ஸ்தபதி அவர்கள் 2007/2008 களில் வரைந்த நீர்வண்ண ஓவியம். கடகத்தில் கறிக்காய்கள் கொண்டுவரும் பெண்கள். இந்த காட்சியை பல தென்மாவட்டங்களில் கூடும் வார சந்தைகளில் நம்மால் இன்றும் காணமுடியும் சற்றும் குறைந்த எண்ணிக்கையில்.


படம்3: கடகம் சென்னை MRC நகரில் உள்ள மஞ்சள் அறக்கட்டளையில் விற்பனைக்கு  காட்சிபடுத்தப்பட்டிருந்த கடகம்.தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பனையோலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டுவந்தன இவ்விடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதெல்லாம் இருந்தாலும், நாகரிக மோகம் காரணமாகப் பனையோலைக் கைவினைப் பொருட்கள் தற்போது மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. பாரம்பரியமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தனை சேர்ந்த  திருமதி. விசாலாட்சி ராமசாமி ஆச்சி அவர்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மஞ்சள் அறக்கட்டளை ( M.Rm.M culture foundation ) என்ற பெயரில் சிவகங்கை மாவட்டம்  செட்டிநாட்டு பகுதி  பெண்களை கொண்டு  அப்பகுதியில் புழக்கத்தில் இருந்த கொட்டான், கடகம் , தடுக்கு ,கூடை  போன்ற பனையால் செய்த பொருட்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  சென்னையில் உள்ள இவரது( M.Rm.M culture foundation MRC Nagar Main Road, No. 70, MRC Nagar 1st Ln, MRC Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028 https://chettinadculture.wixsite.com/mrmrmcf ) நிறுவனத்தில் விற்பனையும் செய்கின்றார்கள். இந்த நிறுவனத்திற்கு 2012 ஆண்டு தெற்காசிய நாடுகளுக்காக UNESCO நடத்திய கைவினைப்பொருட்களுக்கான  நிகழ்ச்சியில்   சிறந்த  கைவினைப்பொருளுக்கான விருதினை இந்நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

--று.நா.இராமு

No comments: